May 25, 2012

இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்

Share Subscribe
பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்- 6 என்னும் 800 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட இருக்கிறது. பிரான்ஸ் நாட்டிடம் இல்லாத ராக்கெட்டா? பல டன் எடை கொண்ட செயற்கைக்கோளை உயரே எடுத்துச் செல்லக்கூடிய ஏரியான்-5 ராக்கெட்டை பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பு என்று சொல்லலாம். பிறகு ஏன் ஸ்பாட் செயற்கைக்கோள் இந்தியாவுக்கு வருகிறது?

இந்திய ராக்கெட் மூலம் செலுத்தினால் செலவு குறைவு. ஆகவே தான் பிரான்ஸ் ஏரியான் 5 (Ariane) ராக்கெட்டை நாடாமல் நம்மை அணுகுகிறது. இதற்கு பிரான்ஸ் நமக்குப் பணம் தரும்.

இந்தியாவின் பி.எஸ்.எல். வி. ராக்கெட்
இதற்கு நேர்மாறாக இந்தியாவின் ஜிசாட்-10 செயற்கைக்கோள் (எடை 3435 கிலோ) தென் அமெரிக்காவில் உள்ள் கூரு என்னுமிடத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஜூலை-ஆகஸ்ட் மாத வாக்கில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் 5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 உயரே செலுத்தப்படும். இந்த அளவுக்கு எடை கொண்ட செயற்கைக்கோளை உயரே அனுப்ப இந்தியாவிடம் தகுந்த ராக்கெட் இல்லை. ஆகவே தான் அது கூரூ நிலையத்துக்குச் செல்கிறது. இதற்காக நாம் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு நிறையவே பணம் தருவோம்.

இந்தியாவின் பி.எஸ்.எல்.வி (PSLV) ராக்கெட் மிக நம்பகமானது தான் - அது கடந்த பல ஆண்டுகளில் 20 தடவை வெற்றி கண்டுள்ளது. ஆனால் அதன் மூலம் அதிகபட்சம் சுமார் 1800 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளைத் தான் உயரே செலுத்த முடியும்.

. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்
மூன்று டன், நான்கு டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை உயரே செலுத்துவதற்கான சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்க இந்தியா முயற்சி செய்யாமல் இல்லை. இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. (GSLV) எனப்படும் புதிய வகை ராக்கெட்டின் நோக்கமே அது தான். ஆனால் அந்த முயற்சிகள் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. அதனால் தான் பிரச்சினை.

சக்திமிக்க ராக்கெட்டை உருவாக்க கிரையோஜெனிக் எஞ்சின் தேவை. இந்தியா சொந்தமாக கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினை உருவாக்க 1986 ஆம் ஆண்டிலிருந்தே முயன்று வருகிறது. இதற்கிடையே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு விற்க ரஷியா சம்மதித்து. இதன் விளைவாக அப்போது இந்தியாவின் முயற்சியில் சற்று சுணக்கம் ஏற்பட்டதாகவும் கூறலாம்.

ஆனால் ராக்கெட் துறையில்-- வேறு எந்தத் துறையிலும் -- இந்தியா முன்னேறுவதை அமெரிக்காஅப்போது விரும்பவில்லை. எனவே இந்தியாவுக்கு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் தொழில் நுட்பத்தை விற்கக்கூடாது என்று ரஷியா மீது அமெரிக்கா பெரும் நிர்பந்தத்தைச் செலுத்தியது. சோவியத் யூனியன் உடைந்து ரஷியாவை அதிபர் யெல்ட்சின் ஆண்டு கொண்டிருந்த காலம் அது.

இந்தியா உருவாக்கிய
கிரையோஜெனிக் எஞ்சின் சோதிக்கப்படுகிறது
அக்கால கட்டத்தில் பல பிரச்சினைகளை எதிர்ப்பட்டிருந்த யெல்ட்சின் எளிதில் அமெரிக்க நிர்பந்தத்துக்குப் பணிந்தார். இந்தியாவுடனான ஒப்பந்தம் 1992 ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக ஏழு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின்களை மட்டும் இந்தியாவுக்கு அளிக்க ரஷியா முன்வந்தது.

ரஷியா அளித்த கிரையோஜெனிக் எஞ்சின்கள் இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி.   ராக்கெட்டுகளில் பயனப்டுத்தப்பட்டன. ரஷிய எஞ்சினைப் பயன்படுத்தி 2001 ஆம் ஆண்டிலிருந்து ஆறு தடவை உயரே செலுத்தியதில் இரண்டு தடவை மட்டுமே வெற்றி கிட்டியது. இதல்லாமல் இந்தியா சொந்தமாக உருவாக்கிய கிரையோஜெனிக் எஞ்சினை 2010 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் பொருத்தி உய்ரே செலுத்திய போது அது தோல்வியில் முடிந்தது.

பிரச்சினை என்ன என்பது தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. இந்திய கிரையோஜெனிக் எஞ்சின் மே மாதம் கூட நாகர்கோயில் அருகே மகேந்திரகிரி என்னுமிடத்தில் மறுபடி சோதிக்கப்பட்டது.

ஒரு ராக்கெட்டை உருவாக்குவதில் தோல்விகள் சகஜம். ஐரோப்பிய நாடுகள் ஏரியான் ராக்கெட்டை வெற்றிகரமாக உருவாக்கியதற்கு முன்னர் 1960 களின் பிற்பகுதியில் யுரோப்பா என்னும் ராக்கெட்டை உருவாக்க முயன்ற போது தொடர்ந்து தோல்விகளே கிட்டியது. கடைசியில் அத்திட்டமே கைவிடப்பட்டது.

கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை அனேகமாக எல்லா நாடுகளுமே சிரமப்பட்டு தான் உருவாக்கிக் கொண்டன. அமெரிக்கா 1963 ஆம் ஆண்டில் இதில் வெற்றி பெற்றது. ஜப்பான் 1977. பிரான்ஸ் 1979. சீனா 1984. ரஷியா தான் முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பி சாதனை படைத்தது என்றாலும் 1987 ஆம் ஆண்டில் தான் ரஷியா கிரையோஜெனிக் ராக்கெட் தொழில் நுட்பத்தில் வெற்றி கண்டது.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் -- அதாவது கிரையோஜெனிக் எஞ்சின் -- முழு வெற்றி காணவில்லை என்பதால் இந்திய விண்வெளித் திட்டத்தில் சில கோணல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. இந்தியாவின் எடை மிக்க செயற்கைக்கோள்கள் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் தான் இனி செலுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இந்த வகை செயற்கைக்கோள்களுக்கு இதுவரை இருந்துவந்த இன்சாட் என்னும் பெயருக்குப் பதிலாக ஜிசாட் என்று பெயர் வைக்கப்பட்டது.

ஆனால் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் முழு வெற்றி பெறாமல் போனதால் ஜிசாட்-8 கூரூவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஏரியான் மூலம் செலுத்தப்பட்டது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஜிசாட்-10 செயற்கைக்கோளும் ஏரியான் மூலமே செலுத்தப்பட உள்ளது. சந்திரனுக்கு சந்திரயான்-2 என்னும் ஆளில்லா விண்கலத்தைச் செலுத்துவதிலும் தாமதம் ஏற்படும் என்று தோன்றுகிறது. இந்தியாவுக்கு ஏழு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின்களை அளித்த ரஷியா இப்போது அவ்வகையான எஞ்சின்களின் உற்பத்தியை நிறுத்தி விட்டது. எனவே இந்தியா சொந்தமாக உருவாக்கிய கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினை எப்படியாவது வெற்றி பெறச் செய்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

இந்தியா உருவாக்கிய ராக்கெட்டுகள், இடமிருந்து:
1. எஸ்.எல்.வி 2. ஏ.எஸ்.எல்.வி 3. பி.எஸ்.எல்.வி
4. ஜி.எஸ்.எல்.வி மார்க்-2 5. ஜி.எஸ்.எல்.வி மார்க்-3
(இவற்றில் முதல் இரு வகை ராக்கெட்டுகள்
இப்போது பயனில் இல்லை)
இந்தியா இப்போதைய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட்டைப் போல இரண்டு மடங்கு திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டைத் தயாரித்து வருகிறது. இது முற்றிலும் புது மாதிரியிலானது. இதில் இரண்டாவது அடுக்கில் இந்தியாவின் கிரையோஜெனிக் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த ராக்கெட் மட்டும் வெற்றி பெற்றால் இந்தியா தனது எடை மிக்க செயற்கைக்கோள்களை இந்திய மண்ணிலிருந்தே செலுத்த இயலும். ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் 5 ராக்கெட்டை நம்பி இருக்க வேண்டியிராது.

May 20, 2012

கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் என்பது என்ன?

Share Subscribe
ராக்கெட்டும் ஒரு வாகனமே. அது செயற்கைக்கோளை சுமந்து உயரே கொண்டு சேர்க்கிறது. ஆகவே செயறகைக்கோளைச் செலுத்தும் ராக்கெட்டுகளுக்கு “செயறகைக்கோள் செலுத்து வாகனம்” (Satellite Launch Vehicle) என்ற பொதுப் பெயர் உண்டு. ராக்கெட்டுக்குள் வைக்கப்படுகின்ற எரிபொருள் பயங்கர வேகத்தில் பின்புறம் வழியே தீப்பிழமபை பீச்சிடுவதால் முன் நோக்கி அதாவது உயரே பாய்கிறது.

ஒரு ராக்கெட் உயரே கிளம்புகிறது
எந்த எரிபொருளானாலும் அது எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. கார், லாரி போன்று தரையில் செல்கின்ற வாகனங்களுக்கும் சரி, வானில் செல்லும் விமானங்களுக்கும் சரி, காற்று மண்டலத்திலிருந்து ஆக்சிஜன் இயற்கையாகக் கிடைக்கிறது.

ஆனால் ராக்கெட்டானது மிக உயரே செல்வதாகும். அந்த உயரத்தில் காற்று (ஆக்சிஜன்) அனேகமாக இராது. ஆகவே ராக்கெட்டில் உள்ள எரிபொருள் எரிவதற்கு உதவக்கூடிய ஆக்சிஜன் அடங்கிய பொருளையும் சேர்த்து ராக்கெட்டில் வைக்க வேண்டியுள்ளது. பல வேதியல் பொருட்கள் இவ்விதம் ஆக்சிஜனை அளிக்கக்கூடியவை.

செயற்கைக்கோளைச் செலுத்துகின்ற ராக்கெட்டில் ஆக்சிஜனும் அடங்கிய திட எரிபொருளை மட்டும் வைக்கலாம். அல்லது திரவ எரிபொருளையும் அது எரிவதற்கு உதவும் ஆக்சிஜன் அடங்கிய பொருளையும் வைக்கலாம்.

நீல நிறத்தில் இருப்பது திரவ ஹைட்ரஜன் டாங்க்.
சிவப்பு நிறத்தில் உள்ளது திரவ ஆக்சிஜன் டாங்க்.
ஹைட்ரஜன் வாயுவையும் ஆக்சிஜன் வாயுவையும் பயன்படுத்துகின்ற ராக்கெட்டாக இருந்தால் அது அதிக உந்து விசையை அளிக்கும். ஆகவே அதிக எடை கொண்ட செயறகைக்கோளை சுமந்து செல்ல முடியும். ஆனால் ராக்கெட்டில் தனித்தனி டாங்கிகளில் ஹைடரஜன் வாயுவையும் ஆக்சிஜன் வாயுவையும் எடுத்துச் செல்வதானால் பெரிய பெரிய டாங்கிகள் தேவைப்படும். அப்படியான டாங்கிகளைக் கொண்ட ராக்கெட்டை உயரே கிளம்பச் செய்வதே கடினம்.

எனினும் ஹைடரஜன வாயுவை மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகி விடும். அதே போல ஆக்சிஜன் வாயுவை மைனஸ் 184 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்தால் அதுவும் திரவமாகி விடும். ராக்கெட்டின் முன்புறத்தில் தனித்தனி டாங்கிகளில் இந்த திரவங்களை சேமித்து வைக்க முடியும். ராக்கெட் உயரே செல்கையில் இந்த இரண்டும் ராக்கெட்டின் கீழ்ப்புறமுள்ள எஞ்சின் அறையில் வாயுவாக மாறி ஒன்று சேர்ந்து எரிந்து நல்ல உந்து விசையை அளிக்கும்.

கடும் குளிர் நிலையில் உள்ள திரவங்களைப் பயன்படுத்தும் துறைக்கு கிரையோஜெனிக்ஸ் (Cryogenics) என்று பெயர். இது கிரேக்க மொழிச் சொல். எனவே இவ்விதமான குளிர் நிலை திரவங்களைப் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சினுக்கு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் என்று பெயர். திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் ஆகியவற்றை கிரையோஜெனிக் எரிபொருட்கள் என்றும் கூறலாம்.

கிரையோஜெனிக் ராக்கெட்
எஞ்சின் சோதிக்கப்படுகிறது
கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினை உருவாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. முதல் பிரச்சினை உலோகவியல் தொடர்பானது. கடும் குளிர் நிலையில் உலோகங்கள் விசித்திரமாகச் செயல்படும்.உலோகங்கள் எளிதில் உடையும். மெழுகு போலவும் ஆகிவிடலாம். ஆகவே ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜன் ஆகியவற்றை சேமித்து வைப்பதற்கான டாங்கிகள் விசேஷ கலப்பு உலோகத்தால் ஆனவையாக இருக்க வேண்டும். இந்த டாங்கிகளிலிருந்து எஞ்சின் பகுதிக்கு வந்து சேருவதற்கான குழாய்கள் , பம்புகள் போன்றவையும் விசேஷ உலோகத்தால் ஆனவையாக இருக்க வேண்டும்.

டாங்கிகளிலிருந்து இந்த இரு திரவங்களும் எஞ்சின் பகுதிக்கு குறிப்பிட்ட விகிதத்தில் வந்து சேர வேண்டும்.

கடும் குளிர் நிலை ஒரு பிரச்சினை என்றால் கடும் வெப்பமும் ஒரு பிரச்சினையே. எஞ்சின் பகுதியில் இந்த இரு திரவங்களும் வாயுவாக மாறி சேர்ந்து எரியும் போது பயங்கர வெப்பம் தோன்றும். எஞ்சின் பகுதி என்பது கவிழ்த்து வைக்கப்பட்ட அண்டா மாதிரியிலானது. கடும் வெப்பத்தில் இது உருகி விடக்கூடாது. ஆகவே கடும் குளிர் நிலையில் உள்ள திரவங்கள் இந்த அண்டாவைச் சுற்றிலும் பாய்ந்து செல்கின்ற ஏற்பாடும் இருக்க வேண்டும். அப்போது தான் எஞ்சின் பகுதி உருகி விடாமல் இருக்கும். இப்படியாகப் பல பிரச்சினைகள் உள்ள்ன.

சியோல்கோவ்ஸ்கி
திரவ ஆக்சிஜனையும் திரவ ஹைட்ரஜனையும் பயன்படுத்தி ராக்கெட்டை செலுத்த இயலும் என 1903 ஆம் ஆண்டிலேயே ரஷிய மேதை சியோல்கோவ்ஸ்கி கூறினார் என்றாலும் இப்படியான ராக்கெட் எஞ்சினை உருவாக்குவதில் இருந்த எண்ணற்ற் பிரச்சினைகளால் அது சாத்தியமாவதற்குப் பல ஆண்டுகள் பிடித்தன.


அமெரிக்காவில் பிரபல ராக்கெட் நிபுணர் கொடார்ட் திரவ ஆக்சிஜனையும் பெட்ரோலையும் பயன்படுத்தும் மிகச் சிறிய ராக்கெட்டை 1926 ஆம் ஆண்டில் பரிசோதித்து வெற்றி கண்டார்.



உயரே இருப்பது தான் ராக்கெட்.
அதன் அருகே கொடார்ட்
எனினும் பின்னர் ஜெர்மனியில் பான் பிரான் என்னும் ராக்கெட் மேதை பல ஆண்டுக் காலம் பெரும் பாடுபட்டு 1942 அக்டோபரில் திரவ ஆக்சிஜனையும் ஆல்கஹாலையும் (சாராயம் என்றும் சொல்லலாம்) பயன்படுத்துகிற நவீன ராக்கெட்டை உருவாக்கினார். பறக்கும் குண்டு என்று சொல்லத்தக்க அந்த V2 ராக்கெட்டை ஹிட்லரின் படைகள் பிரிட்டன் உட்பட பல நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தின. ஹிட்லரின் அந்த ராக்கெட்டுகள் உலகை நடுங்க வைத்தன.

ஜெர்மனி உருவாக்கிய V 2 ராக்கெட்
பான் பிரான்
(Wernher von Braun)
இரண்டாம் உலகப் போர் முடிந்த உடனேயே அமெரிக்காவும் ரஷியாவும் போட்டி போட்டுக் கொண்டு ஜெர்மனியில் மீதம் இருந்த பல நூறு V2 ராக்கெட்டுகளை அள்ளிச் சென்றன. ஜெர்மன் ராக்கெட் நிபுணர்களையும் பிடித்துச் சென்றன. பான் பிரான் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அமெரிக்காவும் ரஷியாவும் V2 ராக்கெட்டுகளை அடிபபடையாக வைத்து பல ராக்கெட்டுகளை உருவாக்கின.

பின்னர் அமெரிக்காவின் குடிமகனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பான் பிரான் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப உதவிய சாடர்ன்-5 என்னும் பிரம்மாண்டமான ராக்கெட்டை உருவாக்கி உலகப் புகழ் பெற்றார்.

அமெரிக்காவின் சாடர்ன்-5 ராக்கெட்
எல்லா ராக்கெட்டுகளிலும் திரவ ஆக்சிஜனும், திரவ ஹைட்ரனும் பயன்படுத்தப்படுவதில்லை. பல ராக்கெட்டுகளில் திட எரிபொருளும் அத்துடன் கடும் குளிர்விப்பு தேவைப்படாத திரவ எரிபொருளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவ்வித ராக்கெட்டுகளால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்ல இயலாது.

அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை ராக்கெட் சுமந்து செல்ல வேண்டுமானால் கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் தேவை. ஏற்கெனவே குறிப்பிட்டபடி இவ்வகை எஞ்சின் அதிக உந்து விசையை அளிப்பதாகும்

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் 5 ராக்கெட்டானது அனாயாசமாக எட்டு டன் எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது. அது திரவ ஆக்சிஜனையும் திரவ ஹைட்ரஜனையும் பயன்படுத்துகிறது.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின்
ஏரியான் 5 ராக்கெட்
உலகில் இன்று அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் கிரையோஜெனிக் ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் திறன் பெற்றவையாக விளங்குகின்றன.ஆகவே இந்த நாடுகளால் எடை மிக்க செயற்கைக்கோள்களை உயரே செலுத்த முடிகிறது. ஆனால் இந்தியா இன்னும் அத்திறனைப் பெறவில்லை.

இந்தியா இத்தொழில் நுட்பத்தைப் பெற்றுவிடாதபடி அமெரிக்கா ஆரம்ப முதலே முட்டுக்கட்டை போட்டது. ஒரு கட்டத்தில் ரஷியாவும் இதற்கு உடந்தையாக இருக்க நேரிட்டது. இந்தியா பெரும் பாடுபட்டு சொந்தமாக கிரையோஜெனிக் ராக்கெட்டைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. அது தனிக் கதை.

May 12, 2012

காக்கைக்கு உங்கள் குரல் தெரியும்

Share Subscribe
தமிழகத்தில் பல வீடுகளிலும் காக்கைக்கு ஒரு பிடி சோறு வைத்த பின்னர் தான் சாப்பிடுவார்கள். இந்தப் பழக்கம் குறைந்து வந்தாலும் இன்னமும் இருந்து வருகிறது. இல்லத்தரசி காக்கைக்கான சோற்றை வாய்ப்பான இடத்தில் வைத்து விட்டு கா,,,கா என்று குரல் கொடுப்பார். உடனே பல காக்கைகள் கூடிவிடும்.

பிடி சோற்றை வைத்து விட்டு குரல் கொடுப்பவர் வழக்கமான நபரா அல்லது வேறு ஒருவரா என்பது காக்கைக்குத் தெரியும் என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது மனிதக் குரலை அடையாளம் காணும் திறன் காக்கைக்கு உள்ளது என்று கூறப்படுகிறது.


வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினர் இது தொடர்பாக காக்கைகளை வைத்து நடத்திய ஆராய்ச்சியின் முடிவுகள் Journal Animal Cognition  என்னும் ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவரான டாக்டர் கிளாடியா வாஷர் தங்களது இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை தெரிவித்தார்.

காக்கைகளிடம் அன்பு காட்டுபவரும் உண்டு. காக்கைகளைக் கண்டால் விரட்டியடிப்பவர்களும் உண்டு. அந்த அளவில் தங்களிடம் வழக்கமாக அன்பு காட்டுபவர்களின் குரலை காக்கைகள் அடையாளம் கண்டுகொள்கின்றன. புதிதாக ஒருவர் அழைத்தால் அவை சற்றே தயக்கம் காட்டுகின்றன.


வியனனா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி நோக்கில் பல வகையான பறவைகளை வளர்க்கின்றனர். அவர்கள் எட்டு காகங்களைத் தேர்ந்தெடுத்து தங்களது ஆராய்ச்சியை நடத்தினர்.

இது ஒரு புறம் இருக்க, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் வனவளப் பேராசிரியரான ஜான் மார்ஸ்லுப் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆராய்ச்சியில் காகங்கள் மனித முகங்களை எளிதில் அடையாளம் காண்பதாகக் கண்டறியப்பட்டது. மார்ஸ்லுப் 20 ஆண்டுகளாகக் காகங்களை ஆராய்ந்து வருபவர்.

மார்ஸ்லுப் தலைமையிலான குழுவினர் தங்களது ஆராய்ச்சிக்காக ரப்பரினால் ஆன இரு முகமூடிகளைத் தயாரித்தனர். ஒன்று காட்டுவாசி போன்ற முகமூடி. இன்னொன்று அமெரிக்கத் துணை அதிபராக இருந்த டிக் செனியின் முகம் மாதிரியிலான முகமூடி.

காக்கை நிபுணர்
மார்ஸ்லுப்
காட்டுவாசி முகமூடி அணிந்த ஆராய்ச்சி ஊழியர்கள் காகங்களைத் துரத்திப் பிடித்து காலில் அடையாள வில்லையைக் கட்டுவதற்காக, சிறிது நேரம் அடைத்து வைத்துப் பிறகு வெளியே விட்டனர். டிக் சேனி முகமூடி அணிந்தவர்கள் காகங்களைத் துன்புறுத்தவில்லை. சில தடவை இப்படி நடந்த பின்னர் காட்டுவாசி முகமூடி அணிந்து யார் சென்றாலும் காகங்கள் கூட்டமாக ஆக்ரோஷத்துடன் தாக்க முனைந்தன.

டிக் சேனி முகமூடி அணிந்தவர்களை காகங்கள் எதுவும் செய்யவில்லை. முகத்தை (முகமூடியை) வைத்து தங்களுக்கு தீங்கு இழைக்கக்கூடியவர் யார் என்பதை காகங்கள் அடையாளம் கண்டு கொண்டன எனபதை இந்த ஆராய்ச்சி காட்டியது.

பறவை இனங்களில் காக்கைகள் புத்திசாலி என்பதாகப் பல நிபுணர்களும் கூறுகின்றனர்.

May 6, 2012

வெயிலை அதிகம் ஈர்க்க கருப்பு சோலார் பலகைகள்

Share Subscribe

சூரிய மின் பலகைகள்.
ஆழ்ந்த நீல நிறத்தில் உள்ளதைக் கவனிக்கவும்
மேலே உள்ள படத்தை உற்று கவனிக்கவும். சோலார் பலகைகள் எனப்படும் சூரிய மின் பலகைகள் (Solar panels) ஆழ்ந்த நீல நிறத்தில் காணப்படுகின்றன.  உலகெங்கிலும் சூரிய மின் பலகைகள் இந்த நிறத்தில் தான் காணப்படுகின்றன. கூடிய விரைவில் இவை நல்ல கருப்பு நிறத்தில் தயாரிக்கப்படலாம். அதற்குக் காரணம் உண்டு

தமிழகத்தில் விவரம் தெரிந்தவர்கள் யாரும் கோடைக் காலத்தில் கருப்பு நிற சட்டை அல்லது கருப்பு நிற பேண்ட் அணிய மாட்டார்கள். அப்படி அணிந்து வெயிலில் சென்றால் உடல் தகிக்கும். வெயிலை, அதாவது வெப்பத்தை, கிரகிப்பதில் கருப்பு நிறம் முதலிடம் வகிப்பதாகச் சொல்லலாம். ஆகவே தான் தமிழகத்தில் கிராமப்புறங்களில் அந்த நாட்களில் பாரம்பரிய உடையாக வெள்ளைச் சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்து வந்தனர்.

இப்போது சூரிய மின் பலகைகளுக்கு வருவோம். இப்பலகைகள் மீது சூரிய ஒளி படும் போது ஒளியானது மின்சாரமாக மாற்றப்படுகிறது. சூரிய ஒளி என்பது போட்டான்களே (Photons). இந்த போட்டான்களைத் தான் சூரிய மின் பலகைகள் கிரகிக்கின்றன. போட்டான்கள் அதிக அளவில் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இதுவரை ஆழ்ந்த நிறத்தை -- நீல நிறத்தை-- பயன்படுத்தி வந்தார்கள்.

நாட்கோர் நிறுவன டெக்னீஷியன் கருப்பு நிற
சிலிக்கன் வில்லையைக் காட்டுகிறார்
அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் உள்ள நாட்கோர் டெக்னாலஜி என்ற நிறுவனம் அட்டைக் கரி என்று சொல்வோமே அந்த அளவுக்கு கருப்பாக உள்ள சோலார் செல்களைக் கொண்டு சூரிய மின் பலகையைத் தயாரித்து சோதித்துப் பார்த்தது.

வழக்கமான சூரிய மின் பலகைகள் சூரிய ஒளியில் அடங்கிய போட்டான்களில் 96 சதவிகிதத்தையே கிரகிப்பதாகக் கூறப்படுகிறது. இத்துடன் ஒப்பிட்டால் கருப்பு நிற சோலார் செல்கள் 99.7 சதவிகித அளவுக்கு போட்டான்களைக் கிரகிப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்த வித்தியாசம் வெறும் மூன்று சதவிகிதமே என்றாலும் கருப்பு சோலார் செல்களைப் பயனபடுத்தும் போது கூடுதம் மின்சாரம் கிடைக்கும் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.

சோலார் செல்களைத் தயாரிப்பது என்பது மிகுந்த சிக்கல் பிடித்த விஷயம். மிக மிகத் தூய்மையான அளவுக்கு சிலிக்கன் மென் படலங்களைத் தயாரித்து அவற்றைக் கொண்டு தான் சோலார் செல்கள் தயாரிக்கப்படுகின்றன. கரிய நிற சிலிக்கன் மூலம் படலங்களைத் தயாரித்து அவற்றைக் கொண்டு கருப்பு நிற சோலார் செல்களைத் தயாரிப்பது என்பது அதை விடவும் சிக்கலான விஷயம். கருப்பு நிற சோலார் செல்களை உருவாக்குவது குறித்து கடந்த சில காலமாக ஆராய்ச்சி நடந்து வந்தது.

இப்போது மேற்படி அமெரிக்க நிறுவனம் மணிக்கு 2000 கருப்பு நிற சோலார் படலங்களைத் தயாரிப்பதற்கான யந்திரத்தை வடிவமைப்பதற்காக் உற்பத்தியாளர்களுடன் தொடர்பு கொண்டுள்ளது

சிலிக்கன் மென் படலங்களைக் கொண்டு சோலார் செல்கள் உருவாக்கப்படுகின்றன. இப்படியான சோலார் செல்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் மூலம் சூரிய மின் பலகைகள் தயாரிக்கப்படுகின்றன.

கருப்பு நிற சோலார் மின் பலகைகள் குறித்து இத்தாலி, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

May 5, 2012

பெரிய சந்திரனை இன்று இரவு காணலாம்

Share Subscribe
பௌர்ணமி சந்திரன் வழக்கத்தை விட சற்றே பெரிதாக அல்லது சிறிதாக இருக்கிறதா என நாம் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் உற்றுக் கவனிப்பதில்லை. ஆனால் இன்று (மே 5 ஆம் தேதி) இரவு பௌர்ணமி சந்திரன் சற்றே பெரிய வட்டமாகத் தெரியும். வழக்கத்தை விட சந்திரன் நமக்கு சிறிது அருகாமையில் இருப்பதே அதற்குக் காரணம்.

சந்திரன் பூமியைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. சந்திரனின் சுற்றுப்பாதை கச்சிதமான வட்டமாக இல்லை. கொஞ்சம் நீள்வட்டமாக உள்ளது. இதன் விளைவாக சந்திரன் ஒரு சமயம் பூமிக்கு அருகில் உள்ளது. வேறு சில சமயங்களில் பூமிக்கு அப்பால் உள்ளது. இந்த நிலைகளை அண்மை நிலை (Perigee) என்றும் தொலைவு நிலை (Apogee) என்றும் கூறுவர்.

1. சந்திரன் தொலைவு நிலை
2. சந்திரன் அண்மை நிலை.
3. பூமி
சந்திரன் அண்மை நிலையில் இருக்கும் போது கொஞ்சம் பெரிதாகவே தெரியும். இன்று இரவு சந்திரனைப் பாருங்கள். இன்றைய பௌர்ணமி சந்திரன் வழக்கத்தை விட 14 சதவிகிதம் பெரிதாகத் தெரியும். வழக்கத்தை விட 30 சதவிகிதம் பிரகாசமாகக் காணப்ப்டும். 13 மாதங்களுக்கு ஒரு முறை சந்திரன் இவ்விதம் பூமிக்கு அருகாமையில் வருகிறது. ஆகவே இது பெரிய அதிசயமல்ல.

சந்திரன் கிழக்கு வானில் உதித்த உடனே பார்க்காமல், சற்று நேரம் கழித்துப் பார்ப்பது நல்லது. ஏனெனில் அடிவானத்து சந்திரன் எப்போதுமே பெரிதாகத் தெரியும். இன்றைய பௌர்ணமி சந்திரன் சற்றே பெரிதாக்த் தெரியும் என்பதால் அடிவானத்து சந்திரன நன்றாகவே பெரிதாகத் தெரியும். அடிவானில் இருக்கும் போது சந்திரன் அல்லது சூரியன் பெரியதாகத் தெரிவது ஏன் என்பதற்கு இதுவரை எந்த நிபுணராலும் சரியான விளக்கம் அளிக்க இயலவில்லை.

இடது புறம்: இன்றைய தினம் அண்மை நிலையில்
 சந்திரன் இந்த அளவுக்குப் பெரிதாகத் தெரியும்
வலது புறம்: தொலைவு நிலையில் சந்திரன்
இந்த அளவுக்குச் சிறியதாகத் தெரியும்.
சந்திரன் பூமியை சற்றே நீள் வட்டப் பாதையில் சுற்றுவதாகச் சொன்னோம். அண்மை நிலையின் போது சந்திரனுக்கும் பூமிக்கு உள்ள தூரம் 3,56,375 கிலோ மீட்டர். தொலைவு நிலையின் போது சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 4,06,770 கிலோ மீட்டர். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் சுமார் 50 ஆயிரம் கிலோ மீட்டர். இந்த ஆண்டில் சந்திரன் நவம்பர் 28 ஆம் தேதி பௌர்ணமியன்று தொலைவு நிலையில் இருக்கும். அப்போது அது வழக்கத்தை விடச் சிறிதாக இருக்கும்.

இன்றைய பௌர்ணமியை சித்ரா பௌர்ணமி என்பார்கள். ஆனால் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியன்று சந்திரன் அண்மை நிலையில் இருப்பதாக நினைத்து விடக்கூடாது.

சந்திரன் பூமிக்கு சற்றே அருகில் இருப்பதால் ஏதேனும் விளைவுகள் உண்டா? சந்திரனுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. கடல்களில் அலையேற்றம் ஏற்படுவதற்கு சந்திரன் காரணம். ஆகவே இன்று கடல்களில் அலையேற்றம் சற்று அதிக அளவில் காணப்படலாம்.

May 1, 2012

விண்வெளியில் உள்ள ’பறக்கும் மலைகள் ‘ யாருக்குச் சொந்தம்?

Share Subscribe
பூமியும் சந்திரனும் இருக்கின்ற வட்டாரத்தை நோக்கி ‘பறக்கும் மலைகள்’ என்று சொல்லத்தக்க பெரும் பாறைகள் அவ்வப்போது ‘சர், சர்’ என்று வேகமாக வரும். ஆனால் அவை பூமியின் மீது அல்லது சந்திரன் மீது மோதாமல் தமது சுற்றுப் பாதையில் வேகமாகச் சென்று விடும். இவற்றுக்கு   ‘ஆபத்தை உணடாக்கக்கூடிய் அஸ்டிராய்டுகள்’ என்று பெயர். உதாரணமாக மே 19 ஆம் தேதியன்று 31 மீட்டர் நீளம் கொண்ட அஸ்டிராய்ட் சுமார் 9 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்ல இருக்கிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் கடைசியிலான நிலவரப்படி இப்படியான அஸ்டிராய்டுகள் மொத்தம் 1287 உள்ளன. இந்த அஸ்டிராய்டுகள் காலம் காலமாக வந்து போய்க் கொண்டிருக்கின்றன. பூமியுடன் மோத வாய்ப்பில்லை தான். ஆனாலும் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா பல்வேறு வழிகளில் இவற்றைக் கண்காணித்து வருகிறது.

அஸ்டிராய்ட் ஐடா
நாம் இந்த அஸ்டிராய்டுகள் குறித்து கவலைப்படுவதற்குப் பதில் இந்த அஸ்டிராய்டுகள் இனி மனிதனைக் கண்டு பயப்படலாம் .காரணம். அமெரிக்காவின் கோடீஸ்வர முதலாளிகள் இந்த அஸ்டிராய்டுகள் மீது கண் வைத்து விட்டனர்.

அஸ்டிராய்டுகளிலிருந்து பிளாட்டினம், தங்கம் போன்ற அரிய உலோகங்களை வெட்டி எடுத்து வரும் நோக்கில் இப்போது அமெரிக்காவில் தனி கம்பெனி அமைக்கப்பட்டுள்ளது. பிரபல ஹாலிவுட் படத் தயாரிப்பாளரும் கோடீஸ்வரருமான ஜேம்ஸ் கேமரான், கூகுள் நிறுவனர் லாரி பேஜ், கூகுள் சேர்மன் எரிக் ஷ்மிட் முதலானோர் முதலீடு செய்து Planetary Resources  என்னும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

அஸ்டிராய்டுகளில் நிறைய உலோகம் அடங்கிய அஸ்டிராய்ட், பெரிதும் பாறையால் ஆன அஸ்டிராய்ட் என பல வகைகள் உண்டு. பெரிதும் உலோகத்தால் ஆன அஸ்டிராய்டில் பிளாட்டினம், தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் அடங்கியிருக்கும்.

பிளாட்டினமும் தங்கமும் நிறைய உள்ளதாகக்
கூறப்படும் அஸ்டிராய்ட் 3554 அமுன்
இரண்டு கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட 3554 அமுன் எனப்படும் அஸ்டிராய்டில் இரும்பு மற்றும் நிக்கல் உலோகங்கள் 8 லட்சம் கோடி டாலர் மதிப்புக்கு உள்ளன. கோபால்ட் எனப்படும் உலோகம் 6 லட்சம் கோடி டாலர். பிளாட்டினம், தங்கம் ஆகிய உலோகங்களின் மதிப்பு மேலும் 6 லட்சம் கோடி டாலர் என்று ஜான் லூயிஸ் என்ற நிபுணர் கூறுகிறார்.

இந்த அமெரிக்க நிறுவனத்தினர் அஸ்டிராய்டுகளிலிருந்து தண்ணீரையும் பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளனர். இத்தண்ணீரிலிருந்து ஆக்சிஜனையும் ஹைட்ரஜனையும் தனித்தனியே பிரித்து அவற்றைத் திரவமாக்கி விண்வெளியிலிலேயே பெரிய டாங்கிகளில் சேமித்து வைக்கவும் திட்டம் உள்ளது. உயரே செல்கின்ற ராக்கெட்டுகளுக்கு அவற்றை எரிபொருட்களாக விலைக்கு விற்க முடியும்.

அஸ்டிராய்டுகளிலிருந்து உலோகங்களை எடுப்பது என்பது ஏதோ புதிதாகத் தோன்றிய கருத்து அல்ல. விண்வெளி ராக்கெட் இயலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் ரஷிய மேதை கான்ஸ்டாண்டின் சியோல்கோவ்ஸ்கி 1903 ஆம் ஆண்டிலேயே இது பற்றிய கருத்தை வெளியிட்டார்.

சூரிய குடும்பத்தில் அஸ்டிராய்ட் மண்டலம்
சூரிய மண்டலத்தில் அஸ்டிராய்டுகள் தனி வகை. செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் இடையே அஸ்டிராய்ட் மண்டலம் உள்ளது. அங்கு லட்சோப லட்சம் அஸ்டிராய்டுகள் உள்ளன. குடியரசு தின விழாவில் அணிவகுத்துச் செல்லும் ராணுவ வீரர்கள் போல இவை அனைத்தும் ஓர் ஒழுங்குடன் அணிவகுத்துச் செல்பவையாக சூரியனைச் சுற்றுகின்றன.

இந்த அஸ்டிராய்ட் மணடலத்திலிருந்து பல ஆயிரம் அஸ்டிராய்டுகள் தனியே கிளம்பி பூமிக்கு அருகே வந்து செல்கின்றன. இவ்விதமான அஸ்டிராய்டுகள் மீது தான் குறிப்பாக கவனம் செலுத்தப்படும்.

விண்வெளித் துறையில் இன்று எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சந்திரனுக்குச் சென்று வருவதை விட அஸ்டிராய்டுக்குச் சென்று வருவது சுலபமானதே. சந்திரனுக்கும் அத்துடன் கிரகங்களுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. ஆகவே அவற்றில் போய் இறங்கினால் ஈர்ப்பு சக்தி காரணமாக அங்கிருந்து எளிதில் உயரே கிளம்ப முடியாது. ராக்கெட் உயரே கிளம்புவதற்கு நிறைய எரிபொருள் தேவைப்படும். அவற்றுடன் ஒப்பிட்டால் அஸ்டிராய்டுகளில் போய் இறங்குவதும் அங்கிருந்து கிளம்புவதும் எளிது. வடிவில் அவை சிறியவை என்பதால் அஸ்டிராய்டுகளின் ஈர்ப்பு ச்கதி மிகக் குறைவாக இருக்கும். ராக்கெட் உயரே கிளம்புவதற்கு கொஞ்சம் எரிபொருள் இருந்தாலும் போதும்.

நாஸா அனுப்பிய டான் (Dawn) என்னும் செயற்கைக்கோள் பூமியிலிருந்து சுமார் 18 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெஸ்டா என்னும் அஸ்டிராய்டை அடைந்து அதைச் சுற்றி வருகிறது.

அஸ்டிராய்ட் வெஸ்டா 
பூமியில் பல நூறு டன் எடை கொண்ட ஒரு பொருளின் எடை அஸ்டிராய்ட் ஒன்றில் மிக அற்ப அளவில் இருக்கும். ஆகவே அங்கிருந்து அரிய உலோகங்கள் அடங்கிய பாறையை எடுத்துக் கொண்டு உய்ரே கிளம்புவது எளிது. சொல்லப் போனால் அவற்றை பூமியில் கொண்டு வந்து இறக்குவது தான் மிகக் கடினமான வேலையாக இருக்கும்.

இத்திட்டத்தை மேற்கொள்வோர் முதலில் தகுந்த அஸ்டிராய்டுகளைத் தேர்ந்தெடுக்க பூமிக்கு மேலே பல டெலஸ்கோப்புகளைப் பறக்க விடுவர். இது இரண்டு ஆண்டுகளில் சாத்தியமாகி விடும் என்று கருதப்படுகிறது. அடுத்த கட்டப் பணி அஸ்டிராய்டுகளுக்கு அனுப்புவதற்காகத் தானியங்கி ரோபாட்டுகளை உருவாக்குவதாகும். மூன்றாவது கட்டத்தில் தான் அஸ்டிராய்டுகளில் ரோபாட்டுகளை இறக்கி அரிய உலோகங்கள் அடங்கிய பாறைகள் வெட்டி எடுக்கப்படும்.

புதிய நிறுவனம் ஏற்கெனவே 25 எஞ்சினியர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டுள்ளது. இவர்களில் பலர் முன்னர் அமெரிக்க நாஸா அமைப்பில் வேலை பார்த்தவர்கள்.

எடுத்த எடுப்பில் இவர்கள் ஒரு முக்கிய பிரச்சினையை சமாளிக்க வேண்டியிருக்கும். சந்திரன், கிரகங்கள், விண்வெளி பற்றி 1967 ஆம் ஆண்டில் சர்வதேச சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி எந்த நாடும் விண்வெளியில் உள்ள சந்திரன் மற்றும் கிரகங்கள் மீது உரிமை கொண்டாட முடியாது. இதில் அஸ்டிராய்டுகளும் அடங்கும். சர்வதேச சட்டத்தில் அரசுகள் பற்றித் தான் கூறப்பட்டுள்ளதே தவிர, தனியார் கம்பெனிகள் பற்றி எதுவும் கூறப்படவில்லை என்று வாதிக்கப்படுகிறது.

அஸ்டிராய்டுகளிலிருந்து பிளாட்டினம், தங்கம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உலோகங்களை எடுத்து வருவது என்பது நல்ல திட்டம் தான். ஆனால் இப்படி அஸ்டிராய்டுகளிலிருந்து ஏராளமான அளவில் பிளாட்டினம், தங்கம் ஆகியவை பூமிக்கு வரும் போது உலக மார்க்கெட்டில் இவற்றின் விலை ஒரேயடியாகச் சரிந்து போக வாய்ப்புள்ளது.உதாரணமாக தங்கத்தின் (ஒரு பவுன்) விலை ரூ 20 ஆயிரத்திலிருந்து ஒரு பவுன் ரூ 2000 ஆகக் குறைந்து போனால் என்ன ஆகும்? பெண்ணைப் பெற்றவர்கள் ரொம்ப சந்தோஷப்படுவார்கள்.