Mar 26, 2015

விண்கல் பூமி மீது மோத வாய்ப்பில்லை

Share Subscribe
ஒரு விண்கல் மார்ச் 27 ஆம் தேதியன்று பூமியின் மீது மோத வாய்ப்புள்ளதாக வீண் வதந்தி கிளம்பி அது சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
அப்படியான ஆபத்து எதுவும் கிடையாது.

உண்மையில் 2014 YB35 என்னும் பெயர் கொண்ட ஒரு விண்கல் 27 ஆம் தேதி  இந்திய நேரப்படி இரவு சுமார் 11 மணி அளவில் பூமியைக் கடந்து செல்ல இருக்கிறது.

அப்போது பூமிக்கும் அந்த விண்கல்லுக்கும் இடையே உள்ள தூரம் 44 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும். இது பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ளதைப் போல 11 மடங்காகும்.  ஆகவே அது பூமியின் மீது மோத சிறிதும் வாய்ப்பில்லை.

பூமியை விண்கற்கள்  கடந்து செல்வது என்பது புதிய விஷயமல்ல. இது அடிக்கடி நிகழ்ந்து வருவதாகும். சொல்லப்போனால் மார்ச் 25 ஆம் தேதி  இரண்டு விண்கற்கள் பூமியைக் கடந்து சென்றன. மார்ச் 26 ஆம் தேதி இரண்டு விண்கற்கள் கடந்து சென்றன. 27 ஆம் தேதி இரண்டு விண்கற்கள் கடந்து செல்லும். 28 ஆம் தேதி இரண்டு விண்கற்கள் இதே போல கடந்து செல்லும்.
விண்கல் 2014 YB 35 சுற்றுப்பாதையின் உத்தேசப் படம்.
1. சூரியன். 2. பூமி. 3. சந்திரன். 4. விண்கல்
பூமியை எண்ணற்ற விண்கற்கள் கடந்து செல்கின்றன. இவற்றுக்கெல்லாம் தனித்தனி சுற்றுப்பாதை உண்டு. இவற்றில் ஓரளவில் பூமியை " அருகில்" கடந்து செல்கின்ற விண்கற்களை நாஸா அடையாளம் கண்டுபிடித்து அவற்றின் பாதையையும் கணக்கிட்டு வைத்துள்ளது.

 இது வரை இவ்விதமான  1563 விண்கற்களை நாஸா அடையாளம் கண்டுவைத்துள்ளது. தவிர, அவற்றின் சுற்றுப்பாதைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இவற்றில் முப்பது மீட்டர் அல்லது நாற்பது மீட்டர் குறுக்களவு கொண்ட விண்கற்கள் உண்டு. சில கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டவையும் உண்டு.

ஒரு விண்கல் பூமியை நோக்கி வருவதாக  இருந்தால் அதை முன்கூட்டிக் கண்டுபிடித்து விட முடியும்.  அவ்விதமான விண்கல்லின் பாதையை  நாமாக மாற்றவும் வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பூமியின் சாய்மானம்
பூமியானது தனது அச்சில் சாய்ந்தபடி உள்ளது. அந்த விதமாக இருந்தபடி தான் அது சூரியனைச் சுற்றி வருகிறது. ஆண்டில் எல்லா மாதங்களிலும் சாய்மானம் ஒரே மாதிரியாக இருக்கும். (  பல ஆயிரம் ஆண்டுகளில் சாய்மானம் மாறத்தான் செய்கிறது. அது முற்றிலும் வேறு விஷயம்)
கீழே உள்ள படத்தைக் கவனிக்கவும்
 படம் நன்றி: pa.msu.edu




21 comments:

Anonymous said...

வணக்கம் ஐயா

சூரியனின் ஈர்ப்புவிசையும் மேலும் கிரகங்களின் பெரிய அமைப்பும் வேகமும் சூரியனைச் சுற்றிவருவதில் ஒரு தர்க்க ரீதியான நியாயம் இருக்கிறது ஆனால் அளவில் மிக மிகச்சிறியதான விண்கற்களும் வால்நட்சத்திரங்களும் சூரியனைச் சுற்றிவருவதற்கான காரணம் வெறும் சூரியனின் ஈர்ப்புவிசை மட்டும் தானா அல்லது விளங்கமுடியாத காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா ஏனென்றால் அளவில் (கிரகங்களுடன் ஒப்பிடும்போது) மிக மிகச்சிறியதான விண்கற்கள் மீது சூரியனின் ஈர்ப்புவிசை அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமா

வெங்கடேஷ்

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெங்கடேஷ்
எண்ணற்ற விண்கற்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இதற்கு சூரியனின் ஈர்ப்பு விசையே காரணம். சிறியதும் பெரியதுமாக எண்ணற்ற விண்கற்கள் உள்ளன. பல கிலோ மீட்டர் அகல நீளம் கொண்டவை அஸ்டிராய்ட் எனப்படுகின்றன.

காரிகன் said...

ராமதுரை சார்,

விண்கற்கள் ஒரு சமயத்தில் ஒரு பெரிய கிரகமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்வது பற்றி?
செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்கற்கள் பாதை --- asteroid belt --- உண்மையில் எதோ காரணத்தினால் துவம்சம் செய்யப்பட்ட ஒரு கிரகம் என்று சிலரால் விவாதிக்கப்படுகிறது. பொதுவாக கிரகங்களுக்கு இடையே உள்ள வழக்கமான தூரம் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் வேறுபடுவதும் இந்த தியரிக்கு இன்னும் வலு சேர்கின்றன. உங்கள் கருத்தை சொல்லவும்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

காரிகன்
செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் ஒரு கிரகம் இருந்தாக வேண்டும் என்று ஒரு கணக்குப் போட்டு வானைத் தேடிய போது கடைசியில் அங்கு எண்ணற்ற அஸ்டிராய்டுகள் தான் கண்டுபிடிக்கப்பட்டன.
ஒரு கிரகம் இருந்து அது உடைந்ததால் தான் அஸ்டிராய்டுகள் உண்டாகின என்று முதலில் ஒரு கருத்து நிலவியது. எனினும் பின்னர் கிரகமாக உருவெடுக்க முடியாமல் போன துண்டுகளே அஸ்டிராய்டுகளாக உருவாகின என்ற கருத்து உருவாகி அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் அஸ்டிராய்டுகளில் பல அவற்றின் பாதையிலிருந்து -- Asteroid Belt -- விலகி இஷ்டத்துக்கு புதுப் பாதையில் சூரியனை சுற்றுகின்றன. அவை தான் அவ்வப்போது பூமியை நெருங்கிக் கடந்து சென்று கவலையை உண்டாக்குகின்றன

Anonymous said...

அய்யா, எங்களுக்குப் பல பிரச்சினைகள்/கேள்விகள்... அவற்றில் சில:

1, "விண்கல் பூமி மீது மோத வாய்ப்பில்லை" எனச் சொல்கிறீர்கள். சரி. ஆனால் பூமி விண்கல் மீது மோதலாம் அல்லவா?

2, வளி மண்டலத்திலிருக்கு ஒசோன் ஓட்டை வழியாக இந்தக் கற்கள், உண்டியலில் போடும் காசு போல பூமி மேல் விழ ஏதாவது சாத்தியக் கூறுகள் உள்ளனவா?

3. நம் தமிழகத்தின் இடியாப்பச் சிக்கல் பிரச்சினைகளுக்கான முழுமையான தீர்வாக இந்த விண்கற்கள் இருக்குமா?

4. "அஸ்டிராய்டுகள்" என்று எழுதியிருக்கிறீர்கள். இவை ஸ்டிராய்டுகளுக்கு முறிவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுபவையா? ஆமென்றால் உங்கள் சென்னை மருந்துக்கடைகளில் அ-ஸ்டிராய்டுகள் கிடைக்குமா?

5. இன்னொன்றும்: "வீண் வதந்தி" என்று சொல்லியிருக்கிறீர்கள்; ஆனால் வீணற்ற வதந்திகளும் உள்ளனவா?

அவசரமில்லை. சாவகாசமாக, விண்கல் தாண்டிப்போனவுடன் பதில் போடவும்.

நன்றி.

அஞ் ஞாநி

என்.ராமதுரை / N.Ramadurai said...

அஞ் ஞாநி
தாங்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் உயர் விஞ்ஞானம் சம்பந்தப்பட்டவை. ஆகவே இவற்றுக்குத் தாங்கள் வேறு இணைய தளத்தில் தான் விடை காண இயலும்.

ABUBAKKAR K M said...

வணக்கம் அய்யா .
பதிவு , வழக்கம்போல் வானவியல் பற்றியும் ,
CELESTIAL BODIES பற்றியும் சாமானியர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது . நன்றி.
<> கே.எம். அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி 627416

Anonymous said...

Sir ,

This site is awesome , please write about future rocket propulsion technologies .

Anonymous said...

Dear Sir,
Thanks for the post. You mentioned the path of the asteroid can be changed. Can you explain little more? How scientist change the path? Is there any size restriction on controlling the asteroid's path. Once again, thanks for your post..

Regards
Arun

Unknown said...

Hello sir , i have one doubt pls clear it. i know it is not related to this article, if u have time pls clear it..

why the raising and setting sun can be seen in naked eye, and why the color of the sun is orange at that time. please explain it sir

என்.ராமதுரை / N.Ramadurai said...

Arun
பூமியை நோக்கி வரக்கூடிய அஸ்டிராய்டின் பாதையை மாற்ற அல்லது எதிர்கொண்டு சென்று அழிப்பதற்கு அல்லது அதன் பாதையை மாற்றுவதற்குப் பல வழிகள் உள்ளன.அஸ்டிராய்ட் பூமியை வந்து தாக்குமா என்பதை நாம் பல மாதங்களுக்கு முன்னரே அறிந்து கொள்ள முடியும். ஆகவே ஆயத்தம் செய்ய அவகாசம் இருக்கும்.
எந்த அஸ்டிராய்டும் வளைந்த பாதையில் தான் வரும். .அம்பு போல் நேர் கோட்டுப் பாதையில் வராது. ஆகவே அதன் பாதையை சில டிகிரி மாற்றினாலும் போதும். மோதாமல் சென்று விடும்.அந்த அளவில் அஸ்டிராய்டை நோக்கி அதன் மீது மோத ஒரு ராககெட்டை அனுப்பினாலும் அதன் பாதை மாறி விடும். பாதையை மாற்றச் செய்ய வேறு பல வழிகளும் உள்ளன.
அஸ்டிராய்டை எதிர்கொண்டு அழிப்பது இனனொரு முறை. சிறிய அஸ்டிராய்டுகளை இப்படி அழித்து விடலாம். பத்து கிலோ மீட்டர் அகலத்துக்கு மேல் உள்ள அஸ்டிராய்டை அழிக்க அணுகுண்டுகளையும் ஏவி விட முடியும்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

Parthiban CB
சுருக்கமாகச் சொல்வதானால் காற்று மண்டலத்தில் உள்ள நுண்ணிய துகள்கள் ஒளியைச் சிதற அடிக்கின்றன. அடிவானத்தில் காற்று மண்டல அடர்த்தி அதிகம். ஆகவே தான் சூரியன் ஆரஞ்சு கலரில் தெரிகிறது.

Unknown said...

Sir, explain about "tribocharging powder dispensing" in separate article....please...

என்.ராமதுரை / N.Ramadurai said...

Sakthi kumar
வெண்மை நிறம் இயல்பாக வெப்பத்தை ஈர்க்காமல் திருப்பி அனுப்பி விடும். கருப்பு நிறமானது வெப்பத்தைக் கடுமையாக ஈர்க்கும்.(நல்ல கோடையில் கருப்புச் சட்டையையைப் போட்டுக் கொண்டு வெயிலில் சென்றால் சூடு தகிக்கும்.வெள்ளைச் சட்டைதான் கோடைக்கு ஏற்றது). பூமிக்கு ஆபத்தாக இருக்ககூடிய சிறிய அஸ்டிராய்டுகளை நெருங்கி அவற்றின் ஒரு புறத்தில் பவுடர் வடிவிலான விசேஷ கருப்புப் பெயிண்டைப் பூசினால் அதனால் ஏற்படும் விளைவுகள் காரணமாக அந்த அஸ்டிராய்டின் பாதை மாறிவிடும்.
உள்ளபடி அஸ்டிராய்டுகள் தமது அச்சில் சுழல்பவை. எனவே சூரிய ஒளியால் அதன் ஒரு புறம் சூடேறுகிற நேரத்தில் மறு புறம் குளிர் நிலைக்கு உள்ளாகிறது. .இயல்பாக இது காலப் போக்கில் அஸ்டிராய்டின் பாதையில் லேசான மாறுதல்களை உண்டாக்குகிறது. யார்கோவ்ஸ்கி என்ற ரஷிய நிபுணர் நீண்ட காலத்துக்கு முன்னரே இதைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார்..இது சரியே என நடைமுறையில் கண்டறியப்பட்டுள்ளது.
நாமாக அஸ்டிராய்டின் ஒரு புறத்தில் மட்டும் வெள்ளை அல்லது கருப்புப் பெயிண்டை அடித்தால் இந்த விளைவைக் கடுமையாக்கி அதன் பாதை மாறும்படி செய்யலாம்.
அமெரிக்க டெக்சாஸ் பல்கலையைச் சேர்ந்த டேவ் ஹைலாண்ட் இந்த யோசனையைக் கூறியுள்ளார். நாஸா இதைத் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது

ABUBAKKAR K M said...

வணக்கம்.
வாசகர்களின் வினாக்களும் அதற்கு பதிவர் அளிக்கும் பதில்களையும் படித்தாலே , கட்டுரையின் முழு சாராம்சத்தையும் தெரிந்து கொண்ட திருப்தி ஏற்படுகிறது.
<> <> கே.எம். அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி 627416

Unknown said...

thanks sir,
can you explain one more doubt...
1. sometimes i saw the stars in sky are appearing one by one ... can you explain why it is ....

என்.ராமதுரை / N.Ramadurai said...

Parthiban CB
கேள்வி தெளிவாக இல்லை

Unknown said...

yesterday evening i saw one or two stars in the sky .. but later i saw more stars ..my question is why the all stars are not appearing at the same time...pls explain if you understood...

என்.ராமதுரை / N.Ramadurai said...

Parthiban CB
மாலையில் அதாவது இருட்டும் நேரத்தில் முதலில் பிரகாசமான நட்சத்திரங்களே தென்படும். இருட்ட இருட்ட அவ்வளவாகப் பிரகாசமில்லாத நட்சத்திரங்களுக்கும் புலப்பட ஆரம்பிக்கும்.நகர்ப்புறமாக இருந்தால் மங்கலான நட்சத்திரங்கள் புலப்படாது. நகர்ப்புற வெளிச்சமானது வானில் சிதறடிக்கப்படும் என்பதால் அதிக நட்சத்திரங்கள் தெரியாது. நள்ளிரவில் இருட்டான இடத்திலிருந்து பார்த்தால் அதுவும் கிராமப்புறமாக இருந்தால் நிறைய நட்சத்திரங்கள் தெரியும்.

Anonymous said...

வணக்கம் ஐயா

ஒரு சிறிய ஐயம் பூமி 23 1/2 டிகிரி சாய்வாக சுற்றுகிறது அப்படி சாய்வாக இருக்கும் பக்கம் எப்போதும் சூரியனை பார்த்தபடி இருக்க்குமா அல்லது எப்போதும் சூரியனுக்கு எதிர்ப்புறமாக இருக்க்குமா ? இல்லையென்றால் வருடத்தில் முதல் ஆறுமாதத்திற்கு பூமியின் 23 1/2 டிகிரி சாய்வான பக்கம் சூரியனை பார்த்தபடியும் அடுத்த ஆறுமாதத்திற்கு பூமியின் 23 1/2 டிகிரி சாய்வான பக்கம் சூரியனுக்கு எதிர்ப்புறமாக இருக்க்குமா ?

வெங்கடேஷ்

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெங்கடேஷ்
தங்கள் கேள்விக்கான விளக்கமும் படமும் கட்டுரையின் கடைசியில் சேர்க்கப்பட்டுள்ளது

Post a Comment