Aug 29, 2015

வெற்றிப் பாதையில் இந்திய கிரையோஜெனிக் எஞ்சின்

Share Subscribe
கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்டதாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி
விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல். வி ராக்கெட் மார்க் 2
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்ட  ஜி.எஸ்.எல்.வி மார்க்-2 ராக்கெட் வெற்றிகரமாகச் செயல்பட்டு ஜிசாட்-6  என்னும் செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தியுள்ளது. இது, குறிப்பாக இந்தியா சொந்தமாகத் தயாரித்துள்ள கிரையோஜெனிக் எஞ்சினுக்கு கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும்.

இந்த ராக்கெட்டில் மூன்றாவதான முகப்புப் பகுதி இந்த எஞ்சினைக் கொண்டதாக செயல்பட்டது. கிரையோஜெனிக் எஞ்சின்கள் அதிகத் திறன் கொண்டவை. அதிக ஆற்றலை அளிப்பவை. எனவே கிரையோஜெனிக் எஞ்சினைக் கொண்ட ராக்கெட்டினால் அதிக எடையை சுமந்தபடி அதிக உயரத்துக்குச் செல்ல முடியும்.
சோதிக்கப்படும் நிலையில் கிரையோஜெனிக் எஞ்சினின் அடிப்புறப் பகுதி
ஆக்சிஜன் வாயுவை மைனஸ் 183 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகி விடும். அதே போல  ஹைட்ரஜன் வாயுவை மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்தால் அதுவும் திரவமாகி விடும். கொஞ்சம் விட்டால் இந்த இரண்டுமே வாயுவாகி விடும். எனவே கடும் குளிர்விப்பு தேவை. எனவே இந்த இரண்டையும் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சினுக்கு கிரையோஜெனிக் எஞ்சின் என்று பெயர். கிரையோஜெனிக் என்றால் கடும் குளிர்விப்பு என்று பொருள். ஏன் குளிர்விக்க வேண்டும்?

ஹைட்ரஜன் வாயு எரியக்கூடியது. அது எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. இரண்டையும் ராக்கெட்டில் தனித் தனி தொட்டிகளில் வாயு வடிவில் வைத்து  எரியச் செய்வதானால் பிரும்மாண்டமான தொட்டிகள் தேவை. ராக்கெட்டில் அவ்விதம் பிரும்மாண்டமான தொட்டிகளை இணைத்தால் ராக்கெட் கிளம்பாது. எனவே இந்த இரண்டு வாயுக்களையும் தனித்தனியே திரவமாக்கி வெவ்வேறு தொட்டிகளில் வைத்து ,தக்க சமயத்தில் ஒன்று சேர்ந்து எரியச் செய்யும் ஏற்பாடு பின்பற்றப்படுகிறது. கடுமையான அளவுக்குக் குளிர்வித்தால் தான் இந்த வாயுக்கள் திரவமாக மாறும்.


ஆனால் இந்த இரண்டு வாயுக்களையும் பயன்படுத்தும் எஞ்சினை உருவாக்குவதில் பல பிரச்சினைகள் உண்டு. எஞ்சினில் இந்த இரண்டு திரவங்களும் விசேஷத் தொட்டிகளில் அடங்கியிருக்கும். ராக்கெட்டின் அடிப்புறத்தில் உள்ள எஞ்சின் அறைக்கு வரும் போது இவை வாயுவாக மாறி ஒன்று கலந்து எரியும்.
கிரையோஜெனிக் எஞ்சின் தரையில் வைத்து சோதிப்பு
கடும் குளிர்விப்பு  நிலையானது உலோகங்களை  சிதைத்து விடும். எனவே இந்த திரவ நிலையிலான இரு வாயுக்களையும் வைத்திருப்பதற்கான தொட்டிகள், அவை செல்லும் குழாய்கள், பம்புகள் முதலியவற்றை விசேஷ கலப்பு உலோகங்களால் தயாரித்தாக வேண்டும்.  இவை இரண்டும் ராக்கெட்டின்  அடிப்புறம் வழியே பீச்சிடும் போது பயங்கர வெப்பம் தோன்றும். அந்த வெப்பம் எந்த உலோகத்தையும் உருக்கி விடக்கூடியது.

 எனவே ராக்கெட்டில் நெருப்பு  பீச்சுப் பகுதியின் வெளிப்புறத்தில் குளிர்விப்பு செய்தால் உருகாது. அதற்கு அதே அந்த திரவங்களைப் பயன்படுத்த வேண்டும். இப்படியாக கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினைத் தயாரிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன.
கிரையோஜெனிக் எஞ்சின்
கிரையோஜெனிக் ராக்கெட் தொழில் நுட்பம் வெளிநாடுகளிடமிருந்து நமக்கு கிடைக்காதபடி 1990 களில் அமெரிக்கா பல முட்டுக்கட்டைகளைப் போட்டது. அதை உருவாக்குவதற்கு உதவக்கூடிய ”திருகாணி ” கூட நமக்குக் கிடைக்காதபடி வல்லரசுகள் கூட்டாகச் சேர்ந்து கொண்டு தடுத்தன. அமெரிக்க நிர்பந்தத்துக்குப் பணிந்து ரஷியாவும் அத்தொழில் நுட்பத்தை அளிக்க முன் வரவில்லை.

கிரையோஜெனிக் எஞ்சின் சோதிப்பு இன்னொரு படம்
ஏதோ ஓட்டையைக் கண்டுபிடித்து ஏழு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின்களை மட்டும் ரஷியா அளித்தது.முதலில் ரஷிய எஞ்சின்களை நமது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளில் பயன்படுத்திப் பார்த்தோம். பல காரணங்களால் அது சரிப்பட்டு வரவில்லை.  எனவே நாமாக விடாப்பிடியாக  முனைந்து இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிக் கொண்டோம்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் நமது சொந்தத் தயாரிப்பான கிரையோஜெனிக் ராக்கெட்டைப் பயன்படுத்திய போது அந்த எஞ்சின் செயல்படவில்லை. எனினும் 2014 ஆம் ஆண்டில் இந்த கிரையோஜெனிக் எஞ்சின் வெற்றிகரமாக செயல்பட்டு ஜிசாட் 14 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. அந்த செயற்கைக்கோளின் எடை (1980 கிலோ) குறைவு என்பதால் ஒருவேளை வெற்றி கிட்டியதோ என்றும் நினைக்கத் தோன்றியது.

அந்த சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் கூடுதல் எடை கொண்ட              ( எடை 2117 கிலோ) ஜிசாட் 6 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. எனவே நமது கிரையோஜெனிக் எஞ்சின் நம்பகமான வகையில் செயல்படக்கூடியது  என்று தோன்றுகிறது.

ஆனால் இது போதாது  என்று கருதி இந்த எஞ்சினை விட அதிகத் திறன் கொண்ட அதிக எரிபொருளைப் பயன்படுத்துகிற புதிய மாதிரி  கிரையோஜெனிக் எஞ்சினை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இப்புதிய எஞ்சின் இன்னும் ராக்கெட்டில் வைத்து சோதிக்கப்படவில்லை. ஆனாலும் தரையில் நிலையாக வைத்து சோதித்ததில் அது நன்கு செயல்பட்டுள்ளது.
ஜி.எஸ்.எல்.வி மார்க் 2  ராக்கெட்டின் முகப்புப் பகுதி
 புதிய கிரையோஜெனிக் எஞ்சின் அடுத்த ஆண்டு கடைசி வாக்கில் செலுத்தப்பட உள்ள ஜி..எஸ்.எல்.வி மார்க் 3 என்னும் ராட்சத ராக்கெட்டில் வைத்து சோதிக்கப்படும் என்று தெரிகிறது. இப்புதிய வகை ராக்கெட்டினால் சுமார் 4 டன் எடையுள்ள செயற்கைக்கோளை சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்த இயலும்.

மார்க் 3 ராக்கெட் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து தடவை வெற்றி கண்டால் நாம் ராக்கெட் துறையில் நல்ல  முன்னேற்றதை அடைந்தவர்கள் ஆவோம்.

1994 ஆம் ஆண்டிலிருந்து நமது பி.எஸ்.எல்.வி ராக்கெட் 30 தடவைகள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளது என்பது வாஸ்தவமே.  அதன் திறன் குறைவு. ஆனாலும் அதை வைத்துக் கொண்டே நாம் பல சாதனைகள் புரிந்துள்ளோம் என்றாலும் ராக்கெட் துறையில்  கடந்த 20 ஆண்டுளாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகும்.

ஆகவே தான் 1988 ஆம் ஆண்டிலிருந்து நமது எடை மிக்க தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை தென் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ராக்கெட் தளத்திலிருந்து அவர்களது ஏரியான் மூலம் செலுத்தச் செய்து வருகிறோம்.

கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவின் 18 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் ஏரியான் மூலம் செலுத்தப்பட்டுள்ளன. மார்க் 3 ராக்கெட் வெற்றி பெற்றால் அந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நமது சொந்த கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினின்  இப்போதைய வெற்றி அதற்கான பாதையைத் திறந்து விட்டுள்ளது.

.

12 comments:

நம்பள்கி said...

[[[ஏதோ ஓட்டையைக் கண்டுபிடித்து ஏழு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின்களை மட்டும் ரஷியா அளித்தது.முதலில் ரஷிய எஞ்சின்களை நமது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளில் பயன்படுத்திப் பார்த்தோம். பல காரணங்களால் அது சரிப்பட்டு வரவில்லை. எனவே நாமாக விடாப்பிடியாக முனைந்து இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிக் கொண்டோம்.]]

சந்தேகத்தை நிவர்த்திக்கொள்ளவே என் கேள்விகள்:
1. கிரையோஜெனிக் technology நம் கண்டுபடிப்பா? இல்லை வேற ஒருத்தன் கண்டு பிடித்ததை நாம் பயன்படுத்தி (காப்பி என்ற வார்த்தையை தவிர்க்கிறேன்), இந்தியாவில் தயாரித்த்தா? சுருங்க சொன்ன்னால் இந்த ஒரிஜினல் தயாரிப்பு பற்றி கேள்வி இல்லை--இந்த ஐடியாவாவது நம்ம்ளுதா--இந்தியனுதா?

இதற்கு சரியான உதாரணம். இந்தியாவில் vaccine தயாரிக்கிரார்கள். பெருமை நமக்கு வருகிறது; ஆனால், பெருமை நமக்கு வரக்கூடாது! ஏன்?

சரியான தமிழில் சொல்ல வேணும் என்றால் கேடு விளைவிக்கும் கிருமிகளில் இருந்து--அதன் கேடுகளை நீக்கி வீட்டு--ஒரு attenuated vaccine-தயாரித்து --நல்லதை---மக்களுக்கு பாதுகாப்பை மட்டும் கொடுக்கும் தயாரித்த ஐடியா நம்மது இல்லை. காப்பி தான் நம்மளது!

இந்த அறிவு வந்தது வெளிநாட்டில் இருந்து---ஆகவே இப்ப இந்தியாவில் vaccine தயாரித்தாலும் அந்த பெருமை யாருக்கு போகணும்? கட்டாயம் நமக்கு இந்தியாவிற்கு இல்லை!


என்.ராமதுரை / N.Ramadurai said...

திரவ ஹைட்ரஜனையும் திரவ ஆக்சிஜனையும் பயன்படுத்துகின்ற ராக்கெட் தொழில் நுட்பம் முதன் முதலில் அமெரிக்காவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு முன்னர் 1942 வாக்கில் V2 என்னும் ராக்கெட் (போர்ச் சாதனம்) ஹிட்லரின் ஆட்சியில் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. பான் பிரான் என்னும் ஜெர்மன் மேதை பெரும்பாடு பட்டு திரவ ராக்கெட் எஞ்சினை உருவாக்கினார்.
V 2 ராக்கெட்டில் அந்த எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. எனினும் அதில் எதனாலும் ( எதனாலுக்கு குளிர்விப்பு தேவையில்லை) குளிர்விப்பு தேவைப்பட்ட திரவ ஆக்சிஜனும் பயன்படுத்தப்பட்டன.
பின்னர் தான் திரவ ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம்1960 களில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.
இவ்விதத் தொழில் நுட்பத்தை பல்வேறு காரணங்களால் ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு எளிதில் அளிப்பதில்லை. அவரவர் சொந்தமாக முயற்சித்து உருவாக்கிக் கொள்ள வேண்டியது தான்.
உலகின் முதல் செயற்கைக்கோளை செலுத்திய (1957) அத்துடன் முதல் முதலில் மனிதனை விண்வெளிக்கு (1961) அனுப்பி சாதனை படைத்த ரஷியா 1987 ஆம் ஆண்டு வாக்கில் தான் கிரையோஜெனிக் எஞ்சினை உருவாக்கிக் கொண்டது. அதுவரை ரஷியா தனது ராக்கெட்டுகளில் திரவ ஹைட்ரஜனுக்குப் பதில் எதனால் அல்லது உயர் ரக கெரசினைப் பயன்படுத்தி வந்தது.

Unknown said...

Science, Enginnering, technology இவற்றிற்குள்ள வித்யாசம் என்ன என்று பார்க்க வேன்டும்.
நீங்கள் சொல்லுவதுபடி பார்ததால், இன்றைய கணித்த்தின் ஆரம்பம் இந்தியாவிலேயே உருவானது, அதனால் உலகத்தில் உள்ள அத்தனை கணித கண்டுபிடிப்பின் பெருமையும் இந்தியாவுக்கு மட்டுமே சேருமா?

Unknown said...

கிரயோஜெனிக் எஞ்சின் பொறுத்திய நமது ராக்கெட் பற்றிய விரிவான தங்கள் பதிவிற்காக காத்திருந்தேன், அனைவரும் புரிந்து கொள்ள தொடர்ந்து தமிழில் பதிவிடும் தங்களுக்கு நன்றி ஐயா

Unknown said...

புவி ஈர்ப்பு விசையை வெல்ல இவ்வளவு சிரமம் உள்ளதே? புவியிலிருந்து எவ்வளவு தூரம் வரை இந்த ஈர்ப்பு விசை ஒரு பொருளை இழுக்கும்? இதைவிட எளிய தொழில் நுட்பம் மூலம் அதிக எடை கொண்ட செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த ஆராய்ச்சி செய்து மற்ற நாடுகளுக்கு இந்தியா முன்னுதாராணமாக திகழ வேண்டும் என்பதே என் விருப்பம். தங்களுக்கு தெரிந்தவரை கிரையோஜனிக் அல்லாத வேறுவகை தொழில் நுட்பம் பற்றிய சாத்தியகூறுகள் உள்ளதா என்பது பற்றி கூறவும்.(உதாரணமாக தூக்கி செல்ல வேண்டிய பொருளை சுழற்றுவதன் மூலம் எடை இழப்பு செய்து விண்ணில் எளிமையான ராக்கட்டுகளில் அனுப்பமுடியுமா என்பது போன்ற யுக்திகளைக் கையாள்வது அல்லது வேறு மாதிரியான வழிகள் உள்ளதா என்பதை பற்றி கூறவும்)
பழனியப்பன்

ABUBAKKAR K M said...

வணக்கம் அய்யா .
வழக்கம்போல , இந்த பதிவும் இளஞர்களுக்கு , குறிப்பாக விஞ்ஞான நாட்டமுள்ளவர்களுக்கு மிக்க பயனுள்ளது. பதிவுக்கு நன்றி.
கிரையோஜெனிக் என்ஜின் பற்றிய அடிப்படைவிளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..
மற்ற நேயர்களின் வினாக்கள் - அதற்கு தங்கள் விளக்கங்கள் அறிய காத்து இருக்கிறேன்.
<> கோ.மீ. அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி - 627416

Nagendra Bharathi said...

அருமை

Thirtha said...

கிரையோஜெனிக் என்ஜின் பற்றிய அடிப்படைவிளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..

பதிவுக்கு நன்றி.

Anonymous said...

supar

Unknown said...

arumai sir

Pavattakudi Ganesh said...

ஐயா கிரையோஜெனிக் என்ஜினின் எடை எவ்வளவாக இருக்கும்?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Pavattakudi Ganesh
அது அந்தந்த் ராக்கெட்டைப் பொறுத்தது. ஆறு டன்னாகவும் இருக்கலாம் அல்லது அதற்குக் குறைவாகவும் இருக்கலாம். திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜன் என அந்த எஞ்சினில் பயன்படுத்தப்படுகிற எரிபொருட்களையும் சேர்த்தால் எடை மேலும் அதிகமாக இருக்கலாம்

Post a Comment