Nov 20, 2011

சந்திரன் பற்றிய 40 ஆண்டுக் கால மர்மத்துக்கு விடை

Share Subscribe
 நீங்கள் ரேடியோ கேட்பவராக இருந்தால் உங்கள் ரேடியோவில் எப்போதாவது வாய்ஸ் ஆப் அமெரிக்கா, பீகிங் ரேடியோ, பி.பி.சி போன்றவை கிடைத்திருக்கலாம். இவை சிற்றலை வரிசையில் ஒலிபரப்பப்படுகின்றன. அந்த அலைகள் உயரே அயனி மண்டலத்துக்குச் சென்று அங்கிருந்து கீழ் நோக்கித் திருப்பப்படுகின்றன.

வீட்டுக்குள் இருப்பவர் கூரையை நோக்கிப் பந்தை வீசினால் அது கூரையில் பட்டுக் கீழ் நோக்கித் திரும்புவது போல அந்த அலைகள் கீழ் நோக்கி வருகின்றன. அதன் காரணமாகவே அந்த ஒலிபரப்புகளைக் கேட்க முடிகிற்து. அந்த வகையில் சிற்றலை ஒலிபரப்புக்கு அயனி மண்டலம் உதவுகிற்து.
 நீண்ட தூர தகவல் தொடர்புக்கு அயனி மண்டலம் உதவுகிறது

பூமியில் காற்று ம்ண்டலத்தின் மேற்புறத்தை சூரியனிலிருந்து வரும் ஒளி மற்றும் பலவேறான கதிர்கள் தாக்குகின்றன. இவற்றில் புற ஊதாக் க்திர்கள் (Ultraviolet) காற்றின் அணுக்களை சிதைக்கின்றன. இதன் விளைவாக அயனியாக்கப்பட்ட வாயு தோன்றுகிறது. இதுவே அயனி மண்டலமாகும்.

ஆகவே பூமிக்குக் காற்று மண்டலம் இருப்பதால் தான் அயனி மண்டலம் உள்ளது. அப்படிப் பார்க்கும் போது காற்றே இல்லாத சந்திரனில் அயனி மண்டலம் இருக்கக்கூடாது. ஆனால் சந்திரனுக்கு மெல்லிய அயனி மண்டலம் இருப்பது 1970களில் கண்டுபிடிக்கப்பட்டது. சோவியத் யூனியன் (இப்போதைய ரஷியா) சந்திரனுக்கு அனுப்பிய லூனா-19 (Luna-19), லூனா-22 ஆகிய விண்கலங்கள் இதைக் கண்டுபிடித்தன. ரேடியோ டெலஸ்கோப் மூலம் விண்வெளியை ஆராயும் விஞ்ஞானிகளும் இதை உறுதிப்படுத்தினர்

அமெரிக்காவில் கொடார்ட் விண்வெளிப் பயண நிலையத்தில் (Goddard Space Flight Center) பணியாற்றும் டிம் ஸ்டப்ஸ் (Tim Stubbs) நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் சந்திரனி்ன் அயனி மண்டலம் பற்றி ஆராய முற்பட்டார். 1971 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் அப்போலோ-15 (Apollo-15) விண்கலம் மூலம் சந்திரனுக்குச் சென்ற போது சந்திரனுக்கு மேலே ஒளிர்வைக் கண்டனர் என்பது பற்றிய விவரத்தை வைத்து ஸ்டப்ஸ் மற்றும் அவரது சகாக்கள் இப்பிரச்சினையை ஆராய முற்பட்டனர்.


சந்திரனுக்கு மேலே விண்வெளி வீரர்கள் கண்ட ஒளிர்வுக்கு சந்திரனின் தூசு காரணமாக இருக்கலாம் என அப்போதிலிருந்து பல விஞ்ஞானிகளும் கருதி வந்தனர். உண்மையில் சந்திரனில் நுண்ணிய தூசு மிக அதிகம். சந்திரனில் முதல் முதலில் காலடி வைப்பவரின் கால்கள் ஒரு வேளை சந்திரனின் தூசுக்குள் புதைந்து விடுமோ என்றும் ஒரு சமயம் அஞ்சப்பட்டது.

ஸ்டப்ஸ் குழுவினர் சந்திரனின் நிலப்பரப்புக்கு மேலே மிதக்கின்ற தூசு சந்திரனின் வானில் அயனி மண்டலம் ஏற்படுவதற்குக் காரணமாக் இருக்கலாம் என்று கருதினர். நுண்ணிய தூசு மீது சூரியனின் புற ஊதாக் கதிர்கள் படும் போது அவற்றை அயனிகளாக்கலாம் என்பது அவர்களின் முடிவாகும்.

வாயுக்கள் அயனிகளாவதற்கு மாற்றாக நுண்ணிய தூசும் அயனிகளாகலாம் என்பது கிரகங்கள் பற்றிய ஆய்வுத் துறையில் புதிய விஷயமாகும். சந்திரனின் அயனி மண்டலம் பூமியின் அயனி மண்டலம் போன்று செயல்படுமா என்பது கேள்விக் குறியாகும். பூமியில் மிகத் தொலைவில் உள்ள இரு இடங்கள் இடையே சிற்றலை மூலம் தொடர்பு கொள்ள அயனி மண்டல்ம் உதவுவது போல சந்திரனில் எதிர்காலத்தில் இப்படியான தகவல் தொடர்புக்கு சந்திரனின் அயனி மண்டலம் உதவுமா என்பது தெரியவில்லை.

அமெரிக்க நாஸா அமைப்பின் செயற்கைகோள் ஒன்று இப்போது சந்திரனை சுற்றிச் சுற்றி ஆராய்ந்து வருகிறது. 2013 ஆம் ஆண்டில் இன்னொரு செயற்கைக்கோள் சந்திரனுக்கு அனுப்பப்பட இருக்கிறது. இவற்றின் மூலம் மேற்படி கேள்விகளுக்கு விடை தெரிய வரலாம்.

ஸ்டப்ஸ் குழுவினரின் ஆய்வு முடிவுகள் Planetary Space Science ஏட்டின் அக்டோபர் இதழில் வெளியிடப்பட்டது.

2 comments:

stalin wesley said...

நல்ல தகவல்

//
Blogger-ன் புதிய வடிவத்தில், கருத்து எழுதியபின் வார்த்தை சரிபார்த்தலை/Captcha தவிர்க்க இப்போதைக்கு வழியில்லை
//

பழைய வடிவத்திற்கு மாற்றி ஆக்டிவேட் செய்யவும் ....


______ __ __ ______ __ __ __ __ ______
/\__ _\ /\ \_\ \ /\ __ \ /\ "-.\ \ /\ \/ / /\ ___\
\/_/\ \/ \ \ __ \ \ \ __ \ \ \ \-. \ \ \ _"-. \ \___ \
\ \_\ \ \_\ \_\ \ \_\ \_\ \ \_\\"\_\ \ \_\ \_\ \/\_____\
\/_/ \/_/\/_/ \/_/\/_/ \/_/ \/_/ \/_/\/_/ \/_____/

என்.ராமதுரை / N.Ramadurai said...

Stalin Wesley: நன்றி, செய்து விட்டேன்.

Post a Comment