Nov 9, 2011

இந்தியாவின் காடுகளில் புலிகளின் போராட்டம்

Share Subscribe

"புலிக்குப் பயந்த பசங்களெல்லாம் எந்தன் மேலே விழுங்கடா" என்று பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சினிமாப் படத்தில் ஒரு பாட்டு உண்டு.  புலியைக் கண்டால் யாருக்கும் பயம் தான். ஆனால் இன்று புலிகள் மனிதனைக் கண்டு பயப்படுகிற நிலைமை உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு மனிதன் புலிகளை வேடையாடிக் கொன்றிருக்கிறான்.

புலி இந்தியாவின் தேசிய விலங்கு. அப்பெயருக்கு ஏற்ற மாதிரியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் ஆயிரமாயிரம் புலிகள் வாழ்ந்தன.  அப்போது கிராமங்கள் அதிகம். காடுகளும் அதிகம்.

புலி வேடைக் காட்சி 
புலிகள் கிராமங்களில் புகுந்து கால்நடைகளைத் தாக்க நேர்ந்த போதெல்லாம் மனிதனுக்கும் புலிக்கும் நேரடி மோதல் நிகழ்ந்தது. அவ்வித சந்தர்ப்பங்களில் தன்னைத் தாக்க வரும் புலியை வில் அல்லது ஈட்டியைக் கொண்டு எதிர்த்துப் போராடி புலியைக் கொல்பவன் வீரனாகக் கருதப்பட்டான். காலப் போக்கில் மெனக்கெட்டு காட்டுக்குச் சென்று பாதுகாப்பான இடத்தில் இருந்தப்டி புலியைக் கொல்வதே வீரத்தின் அடையாளமாகக் கருத ஆரம்பித்தனர். வீரத்தைக் காட்ட மன்னர்கள் காட்டுக்குச் சென்று வேட்டையாட ஆரம்பித்தனர்.

முகலாய மன்னர்கள் காலத்தில் இந்தியாவில் துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. விரைவில் பிரிட்டிஷார் இந்தியாவில் காலூன்றினர். அப்போதே புலிகளுக்கு கெட்ட காலம் தொடங்கியது. வெள்ளைக்கார துரைகள் புலி வேட்டைக்குச் செல்வதென்றால் பெரிய படையே பின் தொடரும். கூடாரம் அமைக்கும் ஊழியர்கள் என ஒரு கும்பல். முரசு கொட்டி புலியை கதிகலங்கச் செய்து துரைமார் முன் ஆஜர்படுத்துவதற்கென ஒரு கும்பல். துரை ஒரு தடவை காட்டுக்குச் சென்றால் குறைந்தது ஐந்து அல்லது ஆறு புலிகள் காலி.

 சுடப்பட்ட புலியுடன்
போட்டோ 
வெள்ளைக்கார துரை மரங்களின் மீது அமைக்கப்பட்ட பரண் மீது பாதுகாப்பாக அமர்ந்து கொண்டிருப்பார். அவரைப் பாதுக்காக்க அருகே ஓரிருவர். கீழே சுற்றி வளைக்கப்பட்ட புலியை துரை துப்பாக்கியால் சுட்டு தனது வீரத்தை வெளிப்படுத்துவார். .எல்லோரும் அவரை மெச்சுவர், புகைப்படக் கலை வந்த பின்னர் புலியைக் கீழே கிடத்தி கையில் துப்பாக்கியுடன் துரை நிற்பது ப்டமாக்கபபலாயிற்று.
காட்டில் நடமாடும் புலி
பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்புடன் ஆங்காங்கு ஆட்சி நடத்திக் கொண்டிருந்த மகாராஜாக்கள், நவாபுகள ஆகியோரும் தங்கள் வீரத்தைக் காட்டினர். தலைநகர்களில் மட்டுமன்றி மாவட்டங்களில் அதிகாரம் செலுத்திய பிரிட்டிஷ் ஐ.சி.எஸ் அதிகாரிகளும் தங்களது வீரத்தைக் காட்டுகின்ற அளவுக்கு நாட்டில் ஆங்காங்கு புலிகள் இருக்கத்தான் செய்தன.

புலி வேட்டையில் பின்னர் ஆர்வம் காட்டியவர்களில் ஜமீந்தார்கள், பெரிய செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் ஆகியோரையும் சேர்க்க் வேண்டும். இப்படியாக நாட்டில் புலிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வந்தது.

அதே நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காடுகளில் மரங்களை வெட்டுதற்கு தாராளமாக லைசென்ஸ் வழங்கினர். தவிர, இந்தியாவில் மக்கள் தொகை பெருக ஆரம்பித்த போது காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டன. இவ்விதமாக புலிகள் உட்பட காட்டு விலங்குகள் வாழுமிடங்கள் சுருங்கிக் கொண்டே வந்தன.

இந்தியா விடுதலை அடைந்து நீண்ட காலத்துக்குப் பிறகு 1970 ஆம் ஆண்டில் தான் புலி வேட்டை மீது மத்திய அரசு தடை விதித்தது. 1972 ஆம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1973ல் புலிகள் காப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. புலிகள் வாழும் புகலிடங்கள் ஏற்படுத்தப்பட்டன். நாட்டில் இப்போது புலிகளுக்கென 39 புகலிடங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள மூன்று புகலிடங்களும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளன.

 புலிகளின் மீதுள்ள வரிகள் புலிக்குப் புலி வித்தியாசப்படும்
இந்தியாவில் எவவளவு புலிகள் உள்ளன என்று அறியும் பொருட்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடந்து வந்துள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1706 புலிகள் உள்ளன - இவ்வாறு கடந்த மார்ச் மாதம் தில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்புடன் ஒப்பிட்டால் 295 புலிகள் கூடுதலாக உள்ளதாகத் தெரிவிக்கப்ப்ட்டது.

காடுகளில் உள்ள புலிகளை எப்படிக் கணக்கிடுவது? ஆரம்பத்தில் புலிகளின் காலடித் தடங்களை வைத்துக் கணக்கிட்டனர். ஒவ்வொரு புலிக்கும் காலடித் தடம் ஒவ்வொரு விதமாக இருக்கும். எனினும் இது சரியான முறை என்று கூற முடியாது. ஆகவே சமீபத்திய கணக்கெடுப்பின் போது Trap Camera  முறை பின்பற்றப்பட்டது.

Trap camera வில் சிக்கிய புலி 
புலிகள் மீதான வரிகள் ஒவ்வொரு புலிக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். காடுகளில் ஆங்காங்கு தானியங்கி காமிராக்களை நிரந்தரமாகப் பொருத்தி விட்டுப் பின்னர் காமிராவில் பதிவான படங்களை வைத்து புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

இதற்கிடையே, நான்காண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்துவதற்குப் பதில் ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இம்மாதக் கடைசியில் தொடங்கும் என்று சில நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்து. Trap camera  முறையை மேலும் செம்மையாகப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புலி வேட்டை 1970 ஆம் ஆண்டிலேயே தடை செய்யப்பட்டு விட்டது என்றாலும் இந்தியாவின் காடுகளில் புலிகள் கள்ளத்தனமாக கொல்லப்படுகின்றன என்பது கசப்பான உண்மை. பல நூறு புலிகள் இவ்விதம் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.

புலிகளின் தோல், எலும்பு, பற்கள், நகம் என ஒவ்வோர் உறுப்புக்கும் ஒரு மருத்துவ குணம் இருப்பதாக சீன மருத்துவம் கூறுகிறது.  சீனா, தைவான், கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சீன மருத்துவம் மீது நம்பிக்கை நிலவுகிறது இக்காரணத்தால் தான் இந்தியாவில் திருட்டுத்தனமாக புலி வேட்டை நடக்கிறது என்கிறார்கள், புலியின் உறுப்புகள் இந்தியாவிலிருந்து  கள்ளத்தனமாகக் கடத்தப்படுகின்றன.இதில் பெரும் பகுதி சீனாவுக்குப் போய்ச் சேருகிறது.
சைபீரியப் புலி 

ஒரு சமயம் தாய்லாந்திலிருந்து ஒரு பெட்டியில் புலிக் குட்டியை அடைத்து வைத்துக் கடத்த முயன்றவர் பிடிபட்டார். உலகில் ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக புலிப் பொருள் கடத்தல் மூன்றாவது இடம் வகிக்கிறது. ஆகவே தான் புலிப் பொருள் கடத்தலை அனுமதிக்கலாகாது என்று 1987 ஆம் ஆண்டில் சர்வதேச மாநாடு ஒன்றில் உடன்பாடாகியது. புலிப் பொருள் விற்பதை அந்தந்த நாடுகள் தடை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டில் சீனா புலிப் பொருள் வர்த்தகம் மீது த்டை விதித்தது.

மாட்டுப் பண்ணை போல சீனாவில் புலிப் பண்ணைகள் உள்ளன என்பது பலருக்கும் புதிய விஷயமாக இருக்கும்.இதுவரை 3000 க்கும் அதிகமான புலிகள் இப்பண்ணைகளில் வளர்க்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்பண்ணைகளை நடத்துவோர் தாங்கள் நிறையப் புலிகளை வளர்ப்பதாகவும் ஆகவே புலிப் பொருள் வர்த்தகத்துக்குத் தடை தேவையில்லை என்றும் வாதிக்கின்றனர். புலிப் பொருள் வர்த்தகம் மீதான் தடையை நீக்கும்படி அரசை நிர்பந்திக்கவே புலிப் பண்ணைகள் நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

புலிப் பண்னைகள் நடத்தப்படலாகாது என்று உலக வங்கியும், உலக வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பும் (WWF) 2009 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் வற்புறுத்தியுள்ளன. இது புலிகள் பாதுகாப்பு இயக்கத்தை வேரறுப்பதில் போய் முடியும் என்பது அவற்றின் கருத்தாகும்.

புலிக் கொலையை எடுத்துக் காட்டும் வரிவ்டிவப் படம்
ஒரு காலத்தில் ஆசியாவில் மேற்கே துருக்கியில் தொடங்கி ஆசியாவின் கிழக்குக் கரை வரை பல நாடுகளிலும் புலிகள் இருந்தன.  இவற்றில் பல இனங்கள் அழிந்து விட்ட்ன. இப்போது ஆசியாவில் ஒரு சில நாடுகளில் மட்டுமே புலிகள் உள்ளன. இந்தியப் புலி இனம் பெங்கால் டைகர் என அழைக்கப்படுகிறது. இது வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் உள்ளது. தவிர, மலேயப் புலி, சுமத்ரா (இந்தோனேசியா) புலி, சைபீரியப் புலி, தென் சீனப் புலி, இந்தோசீனா புலி என பிற புலி வகைகளும் உள்ளன.

1900 ஆம் ஆண்டு வாக்கில் உலகில் ஒரு லட்சம் புலிகள் இருந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. உலக வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பின்படி இப்போது உலகில் சுமார் 3000 முதல 5000 புலிகளே உள்ளன.

1 comment:

Nature Annai said...

Thanks we are save tiger

Post a Comment