Nov 24, 2011

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி என்ன செய்யும்?

Share Subscribe
செவ்வாய் கிரகத்தில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதலாவது வாரத்தில் இறங்கி ஆராயப் போகும் கியூரியாசிடி உண்மையில் நடமாடும ஆராய்ச்சிக்கூடம் (Mars Science Laboratory). அதை ராட்சத ரோபாட் என்றும் வருணிக்கலாம். மனிதனுக்கு உறுப்புகள் உள்ளது மாதிரி அதற்கும் பல உறுப்புகள் உண்டு. எவரும் மலைக்கத்தக்க அளவில் அதன் உயரம் சுமார் 10 அடி. 6 சக்கரங்கள் வடிவில் உறுதியான கால்கள் உள்ளன.

கியூரியாசிடி - ஓவியர் தீட்டிய படம்

மேல் நோக்கி நீட்டிக் கொண்டிருக்கும் தண்டின் உச்சியில் ஒரு நெற்றிக் கண். அதற்கு சற்று கீழே காமிரா வடிவில் இரு கண்கள்.. சுற்று வட்டாரத்தை நோட்டம் விடுவதற்கான வகையில் தண்டின் உச்சிப் பகுதி எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திரும்பக்கூடியது.

மூன்று கண்கள் போதாதென அந்த ரோபாட்டின் வெவேறு பகுதிகளில் மேலும் பல காமிராக்கள். முன் சக்கரங்களுக்கு சற்று மேலே இரு காமிராக்கள். பின்புறத்தில் இதே போல இரு புறங்களிலும் இரு காமிராக்கள். வழியறிந்து செல்ல இவை உதவும், வழியில் தடங்கல் இருந்தால் முன் சக்கர காமிராக்கள் உஷார் படுத்தும்.

குனிந்து கல்லையும் மண்ணையும் அள்ளுவதற்கு கிரேன் வடிவில் ஒரு வலுவான கரம். இக்கரத்தின் நுனிப் பகுதியிலும் ஒரு காமிரா உண்டு. கரத்தின் நுனிப் பகுதியில் ஆல்பா கதிர்களையும், எக்ஸ் கதிர்களையும் வெளிப்படுத்தும் கருவி உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கல் மீது இக்கருவி இந்தக் கதிர்களைப் பாய்ச்சும் போது அக்கல்லின் தன்மை, அதில் அடங்கிய மூலகங்கள் ஆகியன தெரிய வரும்.

குறிப்பிட்ட கல்லைத் தேர்ந்தெடுத்து ஆராய வேண்டுமா என்று விஞ்ஞானிகள் முடிவு செய்ய இக்கருவி உதவும். நீண்ட கரத்தின் நுனியில் துளையிடும் கருவியும் உண்டு. பாறை அல்லது நிலத்தில் துளையிட்டு பொடி வடிவில் சாம்பிள்கள் சேகரிக்கப்ப்டும். அவை ஆராய்ச்சிகூடத்தில் மேலும் பரிசோதிப்பதற்கான பகுதிக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு அப்பொடி சலிக்கப்பட்டு அடுப்புக்குள் போடப்படும். சாம்பிள்கள் 1000 டிகிரி அளவுக்கு சூடேற்றப்பட்டு ஆராயப்படும்.

செவ்வாய் கிரக மண்ணையும் கல்லையும் ஆராய்ந்து தகவல் சேகரிப்பதில் நெற்றிக் கண்ணுக்கு முக்கிய பங்கு உண்டு. அதிலிருந்து கிளம்பும் லேசர் ஒளிக் கற்றையானது சுமார் 7 மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய கற்களைத் தாக்கி சுட்டெரித்து விடும். கல் தீப்பற்றி எரியும் போது எழும் நெருப்பையும் வெளிப்படும் வாயுக்களையும் நெற்றிக் கண் அருகில் உள்ள ஆய்வுக் கருவிகள் பகுத்து ஆராய்ந்து அக்கல்லில் அடங்கிய வேதியல் பொருட்கள் யாவை என்று கண்டறிந்து கொள்ளும்.

 செவ்வாயின் காற்று மண்டலம் என்பது பெரிதும் கார்பன் டையாக்சைட் வாயுவினால் ஆனது. இதில் எந்த அளவுக்கு ஆக்சிஜன் அடங்கியுள்ளது, காற்று மண்டலத்தில் மீதேன் வாயு உள்ளதா என்று ஆராயும் கருவிகளும் இந்த நடமாடும் ஆராய்ச்சிக்கூட்த்தில் உள்ளன. ஹைட்ரஜன் வாயு, ஐஸ், தண்ணீர் ஆகியன உள்ளனவா என்று ஒரு தனி கருவி ஆராயும்.

நடமாடும் ஆராய்ச்சிக்கூடம் மெதுவாகத் தான் நகர்ந்து செல்லும். இதன் நடமாட்டத்துக்கும் மற்றும் கருவிகள் இயங்குவதற்கும் மின்சாரம் தேவை. ஆகவே கியூரியாசிடியில் ஐந்து கிலோ புளூட்டோனியம்-238 என்ற அணுசக்திப் பொருள் வைக்கப்பட்டுள்ளது. இது ஓயாது வெப்ப வடிவில் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த வெப்பம் மின்சாரமாக மாற்றப்படும். செவ்வாயில் இரவு நேரத்தில் கடும் குளிர் இருக்கும். அக்குளிர் கியூரியாசிடியில் உள்ள கருவிகளைப் பாதிக்காமல் இருக்க அணுசக்திப் பொருள் வெளிப்படுத்தும் வெப்பத்தில் ஒரு பகுதி பயன்படுத்தப்படும்.

 பாத் ஃபைண்டர் மற்றும் ஆப்பர்சூனிடி மாடல்கள்
விண்வெளி யுகம் பிறந்ததிலிருந்து எந்த ஒரு கிரகத்துக்கும் இவ்வளவு நுட்பமான, இவ்வளவு வசதி கொண்ட, இவ்வளவு பெரிய ஆராய்ச்சிக்கூடம் அனுப்பப்ப்ட்டது கிடையாது.

சந்திரனுக்கு 1969 ல் தொடங்கி பல விண்வெளி வீரர்களை அமெரிக்கா அனுப்பியது. அவர்கள் சேகரித்து வந்த கல்லும் மண்ணும் பின்னர் ஆராய்ச்சிக்கூடங்களில் வைத்து ஆராயப்பட்டன. இத்துடன் ஒப்பிட்டால் கியூரியாசிடி நடமாடும் ஆய்வுக் கலமானது நிபுணர்கள் செய்ய வேண்டிய பல பணிகளைத் தானே செய்து அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை பூமிக்கு அனுப்பப்போகிறது.

கியூரியாசிடி மேற்கொள்ள இருக்கும் அத்தனை ஆராய்ச்சிகளும் செவ்வாயில் Gale Crater எனப்படும் வட்ட வடிவப் பள்ளம் அமைந்த பகுதியில் நடைபெறும். கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய விண்கல் செவ்வாயைத் தாக்கிய போது இந்த வட்ட வடிவப் பள்ளம் தோன்றியது. 154 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட இந்த வட்ட வடிவப் பள்ளத்தின் நடுவே ஐந்து கிலோ மீட்டர் உயரம் கொண்ட மலையும் உள்ளது. 100 விஞ்ஞானிகள் கூடி ஆராய்ந்து இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். இங்கு தான் நடமாடும் ஆராய்ச்சிக்கூடம் போய் இறங்கும்.

Gale Crater எனப்படும் வட்ட வடிவப் பள்ளம்.
கருப்புக் கோட்டினால் வட்டமிடப்பட்ட
இடத்தில் தான் கியூரியாசிடி போய் இறங்கும்.
செவ்வாய் கிரகத்தில் ஏதோ ஒரு காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாகத் தோன்றுகிறது. இந்த வட்ட வடிவப் பள்ளத்தில் என்றேனும் தண்ணீர் தேங்கியிருந்திருக்குமானால் அங்குள்ள நிலப் பகுதியில் நுண்ணியிர்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். ஆகவே தான் இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கியூரியாசிடி 23 மாத காலம் இப்பகுதியில் அங்குமிங்கும் 20 கிலோ மீட்டர் நடமாடும்.

செவவாய் கிரகத்தை சுற்றிக்கொண்டிருக்கும்
ஒடிசி விண்கலம்
கியூரியாசிடியின் மூளை என்று சொல்லத்தக்க வகையில் அதனுள் இரண்டு கம்ப்யூட்டர்கள் உண்டு. இவை எல்லாத் தகவல்களையும் சேகரித்து செவ்வாய் கிரகத்தை ஏற்கெனவே தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோளுக்கு அனுப்பும். செயற்கைக்கோளிலிருந்து அவை பூமியில் ஆங்காங்கு நாஸா அமைத்துள்ள கேந்திரங்களுக்கு வந்து சேரும். சிக்னல்கள் நேர் கோட்டில் செல்பவை. செவ்வாய் கிரகம் தனது அச்சில் சுழல்கிறது.  பூமியும் தனது அச்சில் சுழல்கிறது. ஆகவே கியூரியாசிடி இருக்கின்ற இடம் அமெரிக்காவுக்கு நேர் எதிரே இல்லாமல் போகலாம். ஆகவே தான் செயற்கைக்கோள் மூலம் தொடர்பு கொள்ளும் ஏற்பாடு பின்பற்றப்படும்.

கியூரியாசிடியை செவ்வாய்க்கு அனுப்பி பரிசோதனைகளை நடத்துவதில் நான்கு பிரதான நோக்கங்கள் உள்ளன. செவ்வாயில் என்றேனும் நுண்ணுயிர்கள் தோன்ற வாய்ப்பு இருந்திருக்குமா? செவ்வாயில் நிலவும் பருவ நிலைமைகள் எத்தன்மை கொண்டவை? செவவாயின் கல், மண், நில அமைப்பு ஆகியவை எப்படிப்பட்டவை? செவ்வாய்க்கு எதிர்காலத்தில் மனிதன் செல்வதற்கு எந்த அளவில் உகந்த நிலைமைகள் உள்ளன? நடமாடும் ஆராய்ச்சிக் கூடம் அனுப்பும் தகவல்கள் மூலம் இக்கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளில் வேறு எந்த கிரகத்தையும் விட செவ்வாய் கிரகத்துக்குத்தான் ஆளில்லா விண்கலங்கள் நிறைய அனுப்பப்பட்டுள்ளன. 1960 களில் அமெரிக்கா சந்திரனுக்கு மனிதனை அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் செவ்வாய் பக்கமும் திரும்பியது.

முதல் கட்டமாக செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயில் இறங்க முயலவில்லை. நெடுஞ்சாலையில் காரில் வேகமாகச் செல்லும் போது சாலை ஓரமாக உள்ள குக்கிராமத்தின் குடிசைகளை போட்டோ எடுப்பது மாதிரியில் செவ்வாயைக் கடந்து சென்ற விண்கலங்கள் தொலைவில் இருந்தபடி செவ்வாய் கிரகத்தைப் படம் பிடித்து அனுப்பின. 1965 ஆம் ஆண்டில அமெரிக்காவின் மாரினர்-4 விண்கலம் இவ்விதம் படங்களைப் பிடித்து அனுப்பிய போது அது பெரும் சாதனையாகக் கருதப்பட்டது. காரணம் செவ்வாயை ‘அருகே’ சென்று படம் பிடித்த முதல் விண்கலம் அதுவேயாகும்.

மாரினர்-4 விண்கலம்
அடுத்த கட்டமாக விண்கலங்கள் செவ்வாயை நெருங்கி அதன் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயின் செயற்கைக்கோளாகின.வானிலிருந்து அவை செவ்வாயின் நிலப்பரப்பைப் படம் பிடித்து அனுப்பின.

மூன்றாவது கட்டத்தில் பூமியிலிருந்து சென்ற விண்கலம் செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்த பின்னர் அதிலிருந்து சிறிய ஆய்வுக் கலம் செவ்வாயில் இறங்கிப் படங்களை அனுப்பியது.

நான்காவது கட்டத்தில் இவ்விதம் இறங்கிய சிறிய ஆய்வுக் கலங்கள் செவ்வாயின் நிலப்பரப்பில் மெதுவாக நகர்ந்து படங்களைப் பிடித்தன. சில ஆய்வுகளையும் மேற்கொண்டன. 1996 ஆம் ஆண்டில் பாத்ஃபைண்டர் (PathFinder) ஆய்வுக்கலம் அனுப்பப்பட்டது., 2004 ஆம் ஆண்டில் ஸ்பிரிட் (Spirit), ஆப்பர்சூனிடி (Opportunity) ஆகிய இரண்டு ஆய்வுக் கலங்கள் அனுப்பப்பட்டன. இவை வடிவில் சிறியவை. பாத்ஃபைண்டரின் உயரம் 30 செண்டிமீட்டர். எடை 10 கிலோ. ஸ்பிரிட் மற்றும் ஆப்பர்சூனிடியின் உயரம் 1.5 மீட்டர். இரண்டுமே தலா 180 கிலோ எடை கொண்டவை. கியூரியாசிடியின் எடையோ 800 கிலோ.

மாணவி கிளாரா மா
முன்னர் அனுப்பப்பட்ட நடமாடும் ஆய்வுக் கலங்கள் மூலம் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தான் இப்போதைய நடமாடும் ஆராய்ச்சிக்கூடம் உருவாக்கப்பட்டது. இதற்குப் பெயர் வைப்பதற்காக நாஸா ஒரு போட்டியை நடத்தியது.  ஆறாவது வகுப்பு படிக்கும் கிளாரா மா என்னும் 12 வயது அமெரிக்க மாணவி இப்போட்டியில் பங்கு கொண்டார். அவர் கூறிய பெயர் ஏற்கப்பட்டு கியூரியாசிடி என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த மாணவியை கவுரவிக்கும் வகையில் கியூரியாசிடி விண்கலம் மீது அவர் கையொப்பமிட அனுமதிக்கப்பட்டார்.

கியூரியாசிடியை சுமந்தபடி அமெரிக்க அட்லஸ் (Atlas) ராக்கெட் வருகிற 26 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும். சுமார் எட்டரை மாதப் பயணத்துக்குப் பிறகு அது செவ்வாய் கிரகத்துக்குப் போய்ச் சேரும்.

மேலும் படிக்க:

செவ்வாய் கிரகத்துக்குச் செல்வது எப்படி?
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா?

4 comments:

செல்வா said...

தகவல்களுக்கு நன்றி ஐயா! இறுதியில் தாங்கள் கொடுத்திருக்கும் இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை. (கவனிக்கவும் )

என்.ராமதுரை / N.Ramadurai said...

கோமாளி செல்வா: நன்றி, சரி செய்து விட்டேன்.

selva g said...

very useful messages.

Saravanan Murugan said...

நல்ல கட்டுரை

Post a Comment