Nov 28, 2011

கடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள்

Share Subscribe
சீனா அண்மையில் இந்துமாக் கடலின் ஒரு பகுதியில் கடலடித் தரையில் கிடக்கும் உலோக உருண்டைகளை எடுப்பதற்கு உரிமை பெற்றது. இந்தியா இதை இந்துமாக் கடலில் காலுன்ற சீனா மேற்கொண்டுள்ள ஒரு முயற்சியாகக் கருதுகிறது. சீனாவின் நோக்கம் குறித்து இந்தியா அவநம்பிக்கை கொண்டுள்ளதைப் புரிந்து கொள்ளலாம்.

இவ்வித உலோக உருண்டைகள் சீனாவுக்குக் கிழக்கே உள்ள பசிபிக் கடலுக்கு அடியிலும் உள்ளன என்றாலும் சீனா மெனக்கெட்டு இந்துமாக் கடலைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்துமாக் கடலில் சீனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்குக் கரையை ஒட்டி அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்துமாக் கடலில் உலோக உருண்டைகளை அள்ளி எடுப்பதற்கு உரிமை பெற்றுவிட்டது. சாம்பிளுக்கு ஓரளவு உலோக உருண்டைகளையும் எடுத்துள்ளது. இந்துமாக் கடலில் இந்தியா உரிமை பெற்றுள்ள கடல் பகுதியானது கன்னியாகுமரிக்குத் தெற்கே 2500 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது (படத்தில் வட்டமிட்ட பகுதி).

இவை ஒருபுறம் இருக்க, கடலடித் தரையில் எவ்விதம் உலோக உருண்டைகள் தோன்றின? அவை எந்த அளவுக்கு இருக்கின்றன? யாருக்குச் சொந்தம்? அள்ளி எடுப்பதற்கு யார் உரிமை வழங்குகிறார்கள்? என்ற விஷயங்களைக் கவனிப்போம்.

தாமிரம்(Copper), நிக்கல்(Nickel), மாங்கனீஸ் (Manganese), கோபால்ட்(Cobalt) போன்ற உலோகங்கள் அடங்கிய தாதுக்களை வெட்டி எடுக்கப் பல சமயங்களிலும் சிரமப்பட்டு ஆழமான சுரங்கங்களைத் தோண்ட வேண்டியிருக்கிறது. அப்படியின்றி இந்த உலோகத் தாதுக்கள் அடங்கிய உருண்டைகள், பல லட்சம் உருளைக் கிழங்கு மூட்டைகளைத் தரையில் கொட்டி வைத்தது போன்று கடலுக்கு அடியில் கிடக்கின்றன என்றால் அது மிக வியப்பான விஷயமே. ஆனால் இவை இதுவரை பெரிய அளவில் கடலிலிருந்து மேலே கொண்டு வரப்படவில்லை. மிக ஆழத்தில் இவை கிடக்கின்றன என்பது இதற்கு ஒரு காரணம்.

 கடலடித் தரையில் கிடக்கும்
உலோக உருண்டைகள்
ரஷியாவுக்கு வடக்கே உள்ள காரா கடலில் தான் 1868 ஆம் ஆண்டில் முதன் முதலில் கடலடி உலோக உருண்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த சேலஞ்சர் ஆராய்ச்சிக் கப்பல் 1872 முதல் 1876 வரை உலகின் பல கடல்களுக்கும் சென்று ஆராய்ந்த போது பல கடல்களிலும் இவ்விதம் உலோக உருண்டைகள் கிடப்பது தெரிய வந்தது.

கடலடி உலோக உருண்டைகள் பல கோடி ஆண்டுகளில் மெல்ல மெல்ல உருவானவை. கடல் நீரில் அடங்கிய மிக நுண்ணிய துணுக்குகள் நாளா வட்டத்தில் ஒன்று சேர்ந்து முதலில் சிறிய உருண்டையாக உருப் பெறுகின்றன. பின்னர் இதன் மீது மேலும் மேலும் படலங்கள் தோன்றுகின்றன.ஒரு மில்லி மீட்டர் குறுக்களவிலான படலம் தோன்றுவதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகலாம்.

உலோக் உருண்டையின்
குறுக்கு வெட்டுத்
தோற்றம்
கடலடி உலோக உருண்டை ஒன்றை எடுத்துக் குறுக்காக வெட்டினால் அது வெங்காயத்தைக் குறுக்காக வெட்டினால் எப்படி இருக்குமோ அந்த மாதிரியில் காணப்படுகிறது.

உலோக உருண்டைகள் எல்லாமே ஒரே சைஸில் இருப்பது கிடையாது. இவை வெவ்வேறு சைஸில் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன். தவிர, கடலடியில் உள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் இவை அதிகம் கிடைக்கின்றன. ஆனால் இவற்றில் உலோகச் செறிவு குறைவு. கடலடி சமவெளியில் உள்ளவை அதிக செறிவு கொண்டவை (கடலுக்கு அடியில் மலைகள், பள்ளத்தாக்கு, சமவெளி, எரிமலை என எல்லாமே உண்டு).

பல்வேறான தொழில் நுட்பப் பிரச்சினைகள் காரணமாக் 1960 களில் தான் இவற்றைக் கடலுக்கு அடியிலிருந்து எடுப்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பல மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து சோதனை அடிப்படையில் இந்த உலோக உருண்டைகளை எடுத்து ஆராய்ந்தன.

இந்திய ஆராய்ச்சிக் கப்பல் சேகரித்த உலோக உருண்டைகள்
உலோக உருண்டைகளில் மாங்கனீஸ் 15 முதல் 30 சதவிகிதம், நிக்கல் 1 முதல் 2 சதவிகிதம், தாமிரம் 1 சதவிகிதம் கோபால்ட் 0.3 சதவிகிதம் அடங்கியுள்ளதாகத் தெரிய வந்தது. இதற்கிடையே இந்தியாவும் இதில் அக்கறை காட்டலாயிற்று. இந்தியாவின் கவேஷனி(Gaveshani) என்னும் பெயர் கொண்ட ஆராய்ச்சிக் கப்பல் 1981 ஆம் ஆண்டிலேயே இவ்விதம் கடலடி உலோக உருண்டைகள் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கியது.

கவேஷினி கப்பல்
கரையோரப் பகுதிகள் நீங்கலாக, மற்றபடி கடல்கள அனைத்து நாடுகளுக்கும் பொதுவானவை. ஆகவே கடலடி வளங்களை பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்துக்கு விடலாகாது என இந்தியாவும் மற்ற வளரும் நாடுகளும் உரத்த குரல் எழுப்பின. இதைத் தொடர்ந்து ஐ.நா. ஆதரவில் சர்வதேச் கடலடி அதிகார ஆணையம் நிறுவப்பட்டது. கடலடி உலோக உருண்டைகளை எடுப்பதில் பல ஆண்டுகள் முனைப்பு காட்டி வந்த நாடுகள் முன்னோடி நாடுகள் என்று வகைப்படுத்தப்பட்டன. இப்படியான நாடுகளுக்கு உலகின் கடல்களில் 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலான கடல் பகுதி ஒதுக்கப்படும். இந்த ஏற்பாட்டின் கீழ் இந்தியாவுக்கு கன்னியாகுமரிக்குத் தெற்கே 2500 கிலோ மீட்டர் தொலைவில் இந்துமாக் கடலில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது.

 சாகர் நிதி கப்பல்
இந்தியாவின் பல கப்பல்கள் இந்துமாக் கடலிலிருந்து நிறையவே கடலடி உலோக உருண்டைகளை சேகரித்துள்ளன. இதற்கென விசேஷ கடலடி யந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையில் அமைந்துள்ள இந்திய தேசிய கடலாராய்ச்சி தொழில் நுட்பக் கழகம் (National Institute of Ocean Technology) உருவாக்கியுள்ள ROSUB 6000 என்னும் ஆழ்கடல் யந்திரக் கருவியானது கடந்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் இந்துமாக் கடலில் 5289 மீட்டர் ஆழத்துக்கு இறங்கி கடலடி உலோக உருண்டைகளை சேகரித்தது. இது 6000 மீட்டர் ஆழத்திலும் செயல்படும் திறன் கொண்டதாகும்.

சாகர் நிதி(Sagar Nidhi) என்னும் கடலாராய்ச்சிக் கப்பலிலிருந்து ROSUB 6000 கடலுக்குள் இறக்கப்பட்டது. மேலிருந்தபடியே ஆழ்கடல் யந்திரக் கருவியை இயக்க முடியும்.

ROSUB 6000
மனிதனால் கடலுக்குள் குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழே செல்ல முடியாது. கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்துக்குச் செல்லும் போது அழுத்தம் பயங்கரமாக அதிகரித்துக் கொண்டே போகும். நாம் நிலத்தில் இருக்கும் போது நம்மைக் காற்று அழுத்துகிறது. பழகிப் போனதால் நாம் இதை உணருவதில்லை. கடலுக்குள் இறங்கும் போது நீரின் எடையும் சேர்த்து அழுத்தும். கடலுக்குள் இயங்கும் சப்மரீன் கப்பல்கள் 6000 மீட்ட்ர் ஆழத்துக்குப் போக முடியாது. அப்படிப் போக நேர்ந்தால் அப்பளம் போல நொறுங்கித் தூள் தூளாகி விடும்.

இது ஒருபுறம் இருக்க, மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள் கடலடி உலோக உருண்டைகளை எடுப்பது குறித்து நீண்ட காலமாக அக்கறை காட்டவில்லை. சர்வதேச சந்தையில் நிக்கல், தாமிரம் ஆகியவற்றின் விலை குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயர்ந்தால் தான் கடலடி உலோக உருண்டைகளை எடுப்பது கட்டுபடியாகும் என்று அவை கருதியதே இதற்குக் காரணம்.

ஆனால் கடந்த ஆண்டில் சீனா மேற்கொண்ட ஒரு நடவடிக்கையானது கடலடி உலோக உருண்டைகள் மீது கட்டாயமாக கவனத்தைத் திருப்பியாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

7 comments:

ranjith kaif said...

அருமை

ராசை நேத்திரன் said...

யாருக்கும் தெரியாத ஒரு செய்தி... ஆச்சரியமான ஒன்று... வணக்கம் இவன் செந்தில்குமார் இயன்முறை மருத்துவன்

Unknown said...

like sir

Thomas Ruban said...

ஆச்சிரியமான செய்தி... பகிர்வுக்கு நன்றி சார்.

JAYARAJ MATHS TEACHER said...

sir
Really now only I hear about this. It will be a nice information to share with my students.

Ganapathi.vv said...

Good news.

Kandumany Veluppillai Rudra said...

Thanks

Post a Comment