Oct 2, 2011

பிரண்டையும் காய்ந்து விடும்

Share Subscribe
    கடந்த சில நாட்களாக சென்னையில் நல்ல வெயில். பிற நகரங்களிலும் அப்படித்தான். இது ஏதோ அசாதாரணமானது அல்ல. இது புரட்டாசி  மாதம். புரட்டாசி வெயிலில் பிரண்டை கூடக் காய்ந்து விடும் என்று ஒரு பழமொழி உண்டு.


    பிரண்டை என்பது கற்றாழை மாதிரி. லேசில் காய்ந்து விடாது. பிரண்டை கூட காய்ந்து விடலாம் என்றால் அந்த அளவுக்கு வெயில் இருக்கும் என்று அர்த்தம். புரட்டாசியில் வழக்கமாக நல்ல வெயில் இருக்கும் என்பதைக் குறிக்க இன்னொரு பழமொழியும் உண்டு: புரட்டாசியில் பொன்னுருகக் காயும்; ஐப்பசியில் மண்ணுருகப் பெய்யும் என்பார்கள்.

    பொதுவில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி சூரியன் பூமியின் நடுக்கோட்டுக்கு (Equator) நேர் மேலே இருக்கும். பிறகு வடக்கு நோக்கி நகர ஆரம்பிக்கும். அப்போது மே மாத முதல் வார வாக்கில் தமிழகத்துக்கு நேர் மேலே இருக்கும். அப்போது நமக்கு கடும் கோடை நிலவும். சூரியன் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து ஜூன் 21 ஆம் தேதியன்று கடக ரேகைக்கு நேர் மேலே இருக்கும். பிறகு அங்கிருந்து தெற்கு நோக்கி அதாவது பூமியின் நடுகோட்டை நோக்கி நகர்ந்து வரும். அவ்விதம் வரும் போது சூரியன் இரண்டாவது தடவையாக ஆகஸ்ட் இரண்டாம் வார வாக்கில்  தமிழக நகரங்களுக்கு நேர் மேலே வரும்.  ஆகவே தான் புரட்டாசி மாதத்தில் வெயில் கடுமையாக இருக்கிறது.வேறு விதமாக்ச் சொல்வதானால் சூரியனின் ஒளிக் கதிர்கள் ஓரிடத்தில் செங்குத்தாக வந்து விழுமானால் வெயில் கடுமையாக இருக்கும். ஆகவே ஏதோ இந்த ஆண்டு மட்டும் செப்டம்பரில் வெயில் அதிகமாக இருப்பதாகக் கருதுவது தவறு.

    சூரியன் வடக்கு நோக்கி நகருவதாகவும் பிறகு தெற்கு நோக்கி நகருவதாகவும் குறிப்பிட்டோம். இதை உத்தராயனம் என்றும் தட்சினாயனம் என்றும் கூறுவார்கள். ஆனால் சூரியன் ஒரே இடத்தில் தான் நிலையாக இருக்கிறது. பூமியானது தனது அச்சில் சுமார் 23 டிகிரி அளவுக்கு சாய்ந்தப்டி சூரியனைச் சுற்றி வருவதால் நமக்கு சூரியன் நகருவது போலத் தோன்றுகிறது. இதன் விளைவாகத்தான் நமக்குப் பருவங்கள் ஏற்படுகின்றன. 

No comments:

Post a Comment